குன்றத்துார் மலையை விழுங்கும் ஆக்கிரமிப்புகள் கபளீகரம்! குடிசைகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றவும் முயற்சி
குன்றத்துார் : தொல்லியல் மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குன்றத்துார் மலையை சுற்றிலும் உள்ள கோவில் மற்றும் அரசுக்கு சொந்தமான நிலங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், குடிசைகள் கான்கிரீட் வீடுகளாக மாற்றும் முயற்சியும் ஜோராக நடந்து வருகிறது.
குன்றத்துார் மலை மீது பழமைவாய்ந்த சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. தமிழகத்தில் வடக்கு நோக்கி அமைந்துள்ள, ஒரே முருகன் கோவில் என்ற சிறப்பை இக்கோவில் பெற்றுள்ளது.
இக்கோவிலைச் சுற்றியுள்ள மலை பகுதிகளில், மத்திய தொல்லியல் துறை சார்பில், 1955ம் ஆண்டில் நடந்த அகழாய்வில், பெருங்கற்கால மக்களின் வாழ்விடங்கள், கல்லறைகள், ஆயுதங்கள் கண்டறியப்பட்டன.
அகழாய்வு
இதன் வாயிலாக, கி.பி., 1,000 — கி.மு., 200 ஆண்டுகள் காலகட்டமான பெருங்கற்காலத்தில், குன்றத்துார் மலையில் மக்கள் வாழ்ந்தது உறுதி செய்யப்பட்டது.
இங்கு கண்டெடுக்கப்பட்ட மட்கலன்களான தட்டு, தாங்கி, தாழி, இரும்பால் செய்யப்பட்ட கத்தி, வளையல்கள், கோடரி, ஈட்டி, ஆணி, குதிரை லாடங்கள், குறுவாள், உளி, அரிய கல் மணிகள், செப்பு நாணயங்கள், சுடுமண் பொம்மைகள் மற்றும் முத்திரைகள், பூண்டி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தொல்லியல் துறை மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த மலை, பல ஆண்டுகளாக முறையான பராமரிப்பின்றி உள்ளது. இதனால், மாலையை சுற்றி ஆக்கிரமித்து, 300க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு உள்ளன.
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், ஒருவரை பார்த்து மற்றொருவர் ஆக்கிரமித்து, புதிய வீடுகள் கட்டும் பணிகளும் நடக்கின்றன.
மேலும், மலையில் உள்ள குடிசை வீடுகளை, கான்கிரீட் வீடுகளாக மாற்றி கட்டும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. வீடு கட்டியுள்ளோருக்கு வசதியாக சாலை, தெரு விளக்கு, குடிநீர் வசதிகளை குன்றத்துார் நகராட்சி நிர்வாகத்தினரே, தாராளமாக ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.
ஆக்கிரமிப்பு மட்டுமின்றி, மலை மீது சமூக விரோத செயல்களும் அதிகம் நடக்கின்றன. இதனால், குன்றத்துார் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், முகம் சுளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அருங்காட்சியகம்
ஆக்கிரமிப்புகளை அகற்றி, குன்றத்துார் மலையை பாதுகாத்து, சுற்றுலாத்தலமாக மேம்படுத்துவது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
குன்றத்துார் மலை மீது சுப்பிரமணிய சுவாமி கோவிலும், மலை அடிவாரத்தில் திருஊரகப்பெருமாள், கந்தழீஸ்வரர், சேக்கிழார் கோவில்களும் உள்ளன.
ஆன்மிக தலமாக உள்ள குன்றத்துாரை மேலும் சிறப்பிக்கும் வகையில், மலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அங்கு பூங்கா, தியான மையம், அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை கொண்டு மினி அருங்காட்சியகம் அமைத்து, சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும்.
குன்றத்துார் மலை சிறியது என்பதால், வருவாய் துறை, தொல்லியல் மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறையினர் இணைந்து, அளவீடு செய்து ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றி, மலையை சுற்றிலும் தடுப்பு வேலி அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அகற்ற நடவடிக்கை
குன்றத்துார் மலை மற்றும் அடிவாரத்தில், கோவிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலமும், அரசுக்கு சொந்தமான மலை புறம்போக்கு நிலமும் உள்ளது. கோவில் இடத்தை வருவாய் துறையினர் வாயிலாக அளவீடு செய்து, ஆக்கிரமிப்பு வீடுகள் கண்டறிந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
– ஹிந்து சமய அறநிலைய துறை அதிகாரி
சுற்றுலா தலமாக மேம்படுத்த எதிர்பார்ப்பு
ஆக்கிரமிப்புகளை அகற்றி, குன்றத்துார் மலையை பாதுகாத்து, சுற்றுலாத்தலமாக மேம்படுத்துவது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:குன்றத்துார் மலை மீது சுப்பிரமணிய சுவாமி கோவிலும், மலை அடிவாரத்தில் திருஊரகப்பெருமாள், கந்தழீஸ்வரர், சேக்கிழார் கோவில்களும் உள்ளன. ஆன்மிக தலமாக உள்ள குன்றத்துாரை மேலும் சிறப்பிக்கும் வகையில், மலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அங்கு பூங்கா, தியான மையம், அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை கொண்டு மினி அருங்காட்சியகம் அமைத்து, சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும்.குன்றத்துார் மலை சிறியது என்பதால், வருவாய் துறை, தொல்லியல் மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறையினர் இணைந்து, அளவீடு செய்து ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றி, மலையை சுற்றிலும் தடுப்பு வேலி அமைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.