சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேறி குடியிருப்பில் தேங்கும் கழிவுநீரால் அவதி

நன்மங்கலம், பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது, நன்மங்கலம். இங்கு, நன்மங்கலம் ஏரியின் கலங்கல் நீர் வெளியேறும் பகுதியில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ளது.

இந்த சுத்திகரிப்பு நிலையம், 15 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. அப்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப, இந்நிலையம் அமைக்கப்பட்டது.

இப்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப, அதன் கொள்ளளவு அதிகரிக்கப்படவில்லை. அதனால், நிலையத்தில் கழிவுநீர் நிரம்பி, அருகில் உள்ள பகுதிகளில் புகுகிறது. இதனால், பகுதிவாசிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:

நன்மங்கலம் ஏரியின் கலங்கல் நீர் வெளியேறும் இடத்திற்கு அருகில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் அமைந்துள்ளன.

ஏரியின் கலங்கல் நீர் செல்லும் கால்வாய், ஆக்கிரமிப்பால் துார்ந்துள்ளது. இதனால், சரியான போக்கு கால்வாய் இல்லை.

நன்மங்கலம் ஏரியில், குரோம்பேட்டை, சிட்லப்பாக்கம், செம்பாக்கம் பகுதிகளின் கழிவுநீர் கலக்கப்படுகிறது. இதனால், ஏரியில் இருந்து வெளியேறும் கழிவுநீர், காலி மனைகளில் தேங்கியுள்ளது.

தவிர, அருகில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில், போதிய பராமரிப்பு இன்மையாலும், கொள்ளளவு பற்றாக்குறையாலும், கழிவுநீர் வெளியேறி குடியிருப்புகளுக்கு அருகிலேயே தேங்குகிறது.

இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் கழிவுநீர் வெளியேற, முறையான மூடுகால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *