10 ஆண்டுகளாக ஒரே இடத்தில் சுகாதார அலுவலர்கள் முறைகேடு? காலி பணியிடங்களை நிரப்பாததால் மற்றொரு சர்ச்சை
சென்னை மாநகராட்சியில், காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாததால், ஒரே வார்டில், 10 ஆண்டுகளுக்கு மேலாக, சுகாதார ஆய்வாளர்கள், அலுவலர்கள் பணியாற்றும் நிலை தொடர்கிறது. இதனால், மன அழுத்தம் ஏற்பட்டு தங்களால் சரியாக பணியாற்ற முடியவில்லை என, அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதேநேரம், ஒரே இடத்தில் பணி தொடர்வதால், சுகாதார அலுவலர்களின் ஆதிக்கம் அதிகரித்து, பல்வேறு முறைகேடுகளுக்கு வழிவகுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை மாநகராட்சியில், 200 வார்டுகள் உள்ளன.இங்கு சுகாதாரம், திடக்கழிவு, பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக, எஸ்.ஐ., என்ற சுகாதார ஆய்வாளர்கள், எஸ்.ஓ., என்ற சுகாதார அலுவலர்கள் உள்ளனர்.
அதன்படி, வார்டு வாரியாக மற்றும் நிர்வாக பணி அடிப்படையில், 236 சுகாதார ஆய்வாளர்களும், 100க்கும் மேற்பட்ட சுகாதார அலுவலர்களும் இருக்க வேண்டும்.
ஆனால், பல ஆண்டுகளாக, சுகாதார ஆய்வாளர்கள், அலுவலர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. தற்போது, 102 சுகாதார ஆய்வாளர்களும், 80க்கும் மேற்பட்ட சுகாதார அலுவலர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.
இதனால், கூடுதல் பணி சுமையால், அவர்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், பற்றாக்குறையை காரணம் காட்டி, 10 ஆண்டுகளுக்கு மேலாக இடமாறுதலும் வழங்கப்படாமல் உள்ளது.
இதனால், ஒரு அதிகாரி, இரண்டு அல்லது மூன்று வார்டுகளை கவனிக்க வேண்டியுள்ளது.
அரசு அதிகாரிகள், மூன்றாண்டுக்கு ஒருமுறை பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என்பது விதி. அவ்விதிக்கு மாறாக, சென்னை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் பணியிட மாறுதல் வழங்கப்படாமல் உள்ளனர்.
இதனால், வார்டு உதவி பொறியாளரைவிட, ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக இருப்பதால், சுகாதார ஆய்வாளர்களே சில இடங்களில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
அவர்கள் வைத்ததுதான் சட்டம் என்ற அளவில் செயல்படுகின்றனர்; உயர் அதிகாரிகளையும் மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது, பல்வேறு முறைகளுக்கும் வழிவகுக்கிறது.
ஒருசில சுகாதார ஆய்வாளர்கள், அலுவலர்கள் பணியிட மாறுதல் கோரினாலும், காலிப்பணியிடங்களை காரணம் காட்டி, அதே இடத்தில் பணியாற்ற வலியுறுத்துவதால், அவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, சுகாதார ஆய்வாளர்கள் கூறியதாவது:
சென்னை மாநகராட்சியில், கமிஷனர் முதல் உதவி பொறியாளர்கள் வரை, அவ்வப்போது மாற்றப்பட்டு வருகின்றனர். பொறியாளர்களுக்கு, பொது கலந்தாய்வு வாயிலாக பணியிட மாறுதல் வழங்கப்படுகிறது.
அதேநேரம், சுகாதார பணியில் இருப்பவர்கள் மட்டும் பாதிக்கப்படும் வகையில், பணியிடமாறுதலை வழங்க மறுக்கின்றனர். ஒருசிலர் பணம், அந்தஸ்து பயன்படுத்தி, சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். ஆனால், முறைப்படி பணியிட மாறுதல் கேட்டு காத்திருப்பவர்களை, மாநகராட்சி கண்டு கொள்வதில்லை.
தற்போது, ஒப்பந்த அடிப்படையில், சுகாதார ஆய்வாளர்கள், அலுவலர்களை நியமிப்பதற்கான பணி நடந்து வருகிறது.
இப்பணியிடங்களுக்கு முன், 10 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் எங்களுக்கு பொது கவுன்சிலிங் நடத்த மாநகராட்சி முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தகுதியில்லாதவர்கள் நியமனம்
சென்னை மாநகராட்சியில், மண்டல வாரியாக சுகாதார அலுவலர்கள் உள்ளனர். இதில், மூன்று மண்டலங்களில் மட்டுமே, நிர்வாகம் தெரிந்த தகுதியான சுகாதார ஆய்வாளர்கள் இருப்பதாகவும், மற்ற மண்டலங்களில் நியமிக்கப்பட்ட டாக்டர்களுக்கு நிர்வாகம் தெரியவில்லை என, சுகாதார ஆய்வாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதனால், பிறப்பு, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு அலுவலகம் சார்ந்த பணிகள் தேக்கமடைகின்றன. எனவே, தகுதியான மண்டல சுகாதார அலுவலர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தயக்கம் ஏன்?
சென்னை மாநகராட்சிக்கென பிரத்யேக சட்டம் இருந்தபோது, அதிகாரிகள் மாநகராட்சி எல்லைக்குள்இடமாறுதல் பெற்று வந்தனர். கடந்த, 2023 நகர்ப்புற உள்ளாட்சி சட்டத்தின்படி, எந்த மாநகராட்சி, நகராட்சிக்கு வேண்டுமானாலும், காலிப்பணியிடங்கள் அடிப்படையில் மாற்றம் செய்து கொள்ள முடியும். தற்போது, சென்னையில் பணியாற்றும், 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர், சொந்த மாவட்டங்களுக்கு செல்ல முயற்சித்து வருகின்றனர். இதனால், பொது கவுன்சிலிங் நடத்தினால், சீனியர் பணியாளர்கள் எண்ணிக்கை குறையும் என்பதால், மாநகராட்சி தயக்கம் காட்டி வருகிறது.