நெருக்கடியான வாடகை கட்டடத்தில் இயங்கும் சார் – பதிவாளர் அலுவலகம் சொந்த கட்டடம் கட்ட வலியுறுத்தல்
குரோம்பேட்டை, குரோம்பேட்டை, நியூ காலனி, இரண்டாவது பிரதான சாலையில், வாடகை கட்டடத்தில் பல்லாவரம் சார் – பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது.
குரோம்பேட்டை, அஸ்தினாபுரம், நெமிலிச்சேரி, ஜமீன்பல்லாவரம், ஈசா பல்லாவரம், பழைய பல்லாவரம், மடிப்பாக்கம், நன்மங்கலம் ஆகிய பகுதிகள், இந்த அலுவலக எல்லையில் அடங்கும்.
பத்திரப் பதிவு, அடமான பத்திரம், திருமண பதிவு, நலச்சங்கங்கள் பதிவு என, நாள்தோறும் நுாற்றுக்கும் மேற்பட்டோர், இந்த அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.
பல ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் இங்கு, வாடிக்கையாளர்கள் அமருவதற்கு போதிய இடவசதி இல்லை.
ஆவணங்கள் வைப்பதற்கும், அதிகாரிகளுக்கும் போதிய அறைகள் இல்லை. அதிகாரிகளுக்கு மட்டும் கழிப்பறை வசதி உள்ளது. மக்களுக்கு கழிப்பறை வசதி இல்லை.
மற்றொரு புறம், பத்திரப்பதிவு செய்ய வருவோர், தங்கள் வாகனங்களை நிறுத்த இடமின்றி தவிக்கின்றனர்.
ஏற்கனவே நெரிசல் கொண்ட இச்சாலையில், பத்திரப் பதிவுக்கு வருவோரின் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், இன்னும் நெரிசல் அதிகரிக்கிறது.
பல ஆண்டுகளாக, நெருக்கடியான இடத்தில் வாடகை கட்டடத்தில் இயங்கும் இவ்வலுவலகத்திற்கு, இடம் ஒதுக்கி சொந்த கட்டடம் கட்ட வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்துகின்றனர்.
பல்லாவரம் தி.மு.க., – எம்.எல்.ஏ., கருணாநிதி, இது தொடர்பாக சட்டசபையிலும் பேசினார். இதையடுத்து, பல பகுதிகளில் இடம் தேடி, பல்லாவரம் தாசில்தார் அலுவலகம் அருகே, அலுவலகம் கட்ட இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதனால், பத்திரப்பதிவு துறை நிதி ஒதுக்கி, கால தாமதமின்றி கட்டடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.