நெற்குன்றத்தில் மின் கேபிள் பதிப்பால் நெரிசல்
நெற்குன்றம், வளசரவாக்கம் மண்டலம், 145வது வார்டு நெற்குன்றத்தில், மாதா கோவில் தெரு உள்ளது. கோயம்பேடு சந்தை மற்றும் மதுரவாயல் பகுதியை இணைக்கும், பிரதான சாலையாகவும் உள்ளது.
அதிகாலை முதல், கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறி, பூ, பழம் வியாபாரிகள், லோடு வேன்களில் மாதா கோவில் தெரு வழியாக செல்வதுவழக்கம். இதனால், இச்சாலையில் நெரிசல் காணப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கோயம்பேடு மெட்ரோ ரயில் மின் நிலையத்தில் இருந்து, மதுரவாயல் துணை மின் நிலையத்திற்கு 110 கே.வி., மின் கேபிள் அமைக்க, மாதா கோவில் தெருவில், 560 மீட்டர் துாரத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
இதில், 300 மீட்டர் துாரத்திற்கு பணிகள் நிறைவடைந்துள்ளன. எஞ்சிய பணியால் இச்சாலை குறுகலாகி, தினமும் கடுமையான நெரிசல் நிலவி வருகிறது.
வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மின் வாரிய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.