‘பார்க்கிங்’ வசதி இருந்தால் மட்டுமே புதிய கார் பதிவு கட்டுப்பாடு ‘கும்டா’ வின் புதிய கொள்கையில் அரசுக்கு பரிந்துரை
சென்னை, சென்னை பெருநகரில் புதிதாக கார் வாங்குவோர், அதை பதிவு செய்யும்போது, உரிய வாகன நிறுத்துமிடம் இருப்பதற்கான ஆதாரத்தை அளிப்பதை கட்டாயமாக்கலாம் என, ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமமான ‘கும்டா’வின் புதிய கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
சென்னை பெருநகரில் ஆண்டு தோறும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப உரிய வாகன நிறுத்துமிட வசதிகள் இருப்பதில்லை. இதனால், சாலையோரங்களில் கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துவது அதிகரித்துள்ளது. இது, பல்வேறு சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட முக்கிய காரணமாக உள்ளது.
இந்நிலையில், போக்குவரத்து குழுமமான கும்டா வாயிலாக, சென்னை பெருநகருக்கான புதிய வாகன நிறுத்துமிட கொள்கை வெளியிடப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. இதன்படி, புதிய வாகன நிறுத்துமிட கொள்கையை, கும்டா வெளியிட்டுள்ளது.
அதன் முக்கிய அம்சங்கள்
பொது போக்குவரத்தை மேம்படுத்தவும், சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைத்து, தனி நபர் வாகனங்களின் பயன்பாட்டை குறைக்கவும், நீண்டகால நடவடிக்கை தேவை.
இதற்காக, தனி நபர்கள் வாகன பதிவு செய்யும்போது, குறைந்தபட்சம் ஒரு வாகன நிறுத்துமிடம் இருப்பதற்கான ஆதாரத்தை அளிக்க வேண்டும்
குடியிருப்பு பகுதிகளில் தெருக்களில் வாகனங்களை நிறுத்துவதற்கான எந்த ஒழுங்குமுறையும் இல்லாததால், விதிமீறல்கள் அதிகரித்துள்ளன. இதனால், குறுகிய குடியிருப்பு தெருக்கள், நீண்டகால வாகன நிறுத்தத்தால் பாதிக்கப்படுகின்றன.
குடியிருப்பு வாகன நிறுத்த அனுமதியின்போது, வாகன நிறுத்துமிடங்களின் எண்ணிக்கை, தற்போதைய தேவையின் அடிப்படையில் மட்டும் பார்க்காமல், அவசர காலத்தில், வாகன புழக்கத்துக்கான சாலையின் கொள்ளளவு அடிப்படையில் தீர்மானிக்கப்படும்
வாகன நிறுத்துமிடங்களை வாங்கும், விற்கும் பொருளாக பயன்படுத்தம் வகையில், நடைமுறைகள் கொண்டு வரப்படும். இதனால், வாகன நிறுத்துமிடத்தை வாங்கி வைத்துள்ள ஒருவர் அதை குத்தகைக்கு விடலாம்
பணியாளர்களுக்கு கெடு
குடியிருப்பு வளாகங்களில் வாகன நிறுத்த அனுமதிக்கான கட்டணங்களை வாராந்திர, மாதாந்திர அடிப்படையில் நிர்ணயிக்கலாம். மேலும், 100 பேருக்கு மேல் பணி புரியும் நிறுவனங்களின் உரிமையாளர்கள், பணியாளர்களுக்கான போக்குவரத்து தேவை, அதன் மேலாண்மை குறித்து முறையாக திட்டமிட வேண்டும். அனைத்து பணியாளரும் தனித்தனி வாகனங்களில் வந்து செல்வதை அனுமதிக்க கூடாது
மாலை நேரங்களில் இரண்டு சந்திப்புகளுக்கு இடைப்பட்ட பகுதியில், சாலையோர வாகன நிறுத்துமிடங்களை அனுமதிக்க கூடாது
சென்னை பெருநகரில் பொது இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் வாகன நிறுத்துமிடங்களை ஒதுக்கும் பணிகளை, ஆன்லைன் முறையில் மேற்கொள்ள வேண்டும். நிகழ்நேர தகவல்கள் அடிப்படையில் வாகன நிறுத்துமிடங்களின் இருப்பு தெரியப்படுத்த வேண்டும்
பொது வாகன நிறுத்தம்
வாகன நிறுத்துமிடங்கள் பயன்பாட்டுக்கான கட்டணம் வாயிலாக கிடைக்கும் நிதி, நகர்ப்புற போக்குவரத்து நிதியத்துக்கு செல்ல வேண்டும். கட்டுமான திட்டங்களை செயல்படுத்துவோர், மாற்றத்தக்க வளர்ச்சி உரிமை அடிப்படையில், பொது வாகன நிறுத்துமிடங்களை ஏற்படுத்தலாம்
காலியாக உள்ள அரசு நிலங்களை, பொது வாகன நிறுத்துமிடங்கள் ஏற்படுத்த குத்தகை முறையில் அளிக்கலாம்
பள்ளி நிர்வாகங்கள் குழந்தைகளை வாகனங்களில் அழைத்து வந்து விடுவதற்கும், மீண்டும் அழைத்து செல்வதற்குமான தனி இடத்தை ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய வாகன நிறுத்தமிட கொள்கைக்கான பரிந்துரைகளை, அரசுக்கு, கும்டா அனுப்பியுள்ளது. அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட துறைகள் வாயிலாக விதிகள், அதற்கான உத்தரவுகள் அடுத்தடுத்து பிறப்பிக்கப்பட உள்ளது.
கும்டாவின் இந்த பரிந்துரைகள் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்பதால், சென்னையில் நெரிசல் பிரச்னை பெருமளவு குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.