மெட்ரோ ரயில் நிலையத்திற்காக இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிலத்தை கையகப்படுத்தும் நோட்டீஸ் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மெட்ரோ ரயில் நிலையத்துக்காக யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பான நோட்டீசை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்காக ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில் உள்ள பழமையான ரத்தின விநாயகர் மற்றும் துர்க்கை அம்மன் கோயில் ராஜகோபுரத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து ஆலயம் காப்போம் கூட்டமைப்பு சார்பில் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கில், மெட்ரோ ரயில் நிலைய நுழைவு, வெளியேறும் பாதை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன வளாகத்தில் மாற்றப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்ததை பதிவு செய்துகொண்டு வழக்கை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது. இந்நிலையில், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் 837 சதுர மீட்டர் பரப்பு நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக விளக்கம் கேட்டு மெட்ரோ ரயில் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீசை எதிர்த்து யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஏற்கனவே முன்அனுமதி பெற்று 200 கோடி ரூபாய் செலவில் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் கட்டுமானங்கள் மேற்கொண்டுள்ள நிலையில், உயர் நீதிமன்றத்தில் தெரிவித்த உத்தரவாதத்தை செயல்படுத்தும் விதமாக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதால் அந்த நோட்டீஸ் ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார். பொதுமக்கள் பாதுகாப்பு, வசதி மற்றும் தொழில்நுட்ப காரணங்களுக்காக மெட்ரோ ரயில் நிலைய திட்டத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. பழையபடி கோயில் முன் மெட்ரோ ரயில் நிலையம் அமைத்துக் கொள்ளலாம் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *