ஆள்மாறாட்டம் செய்து நிலமோசடி போரூர் நபர் கைது

அம்பத்துார், முகப்பேர் கிழக்கு, புகழேந்தி சாலையைச் சேர்ந்தவர் இந்து; மருத்துவர். இவர், ஆவடி மத்திய குற்றப்பிரிவில், கடந்த பிப்., 24ம் தேதி புகார் ஒன்றை அளித்திருந்தார்

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

போரூர், மதனந்தபுரம், மாதா நகர் 8வது தெருவைச் சேர்ந்தவர் ஜெயபாலன், 46, என்பவர் அறிமுகமானார். புழல், சிவபிரகாசம் நகரில், 2,400 சதுர அடி நிலத்தை, அதன் உரிமையாளரான முருகேசன் என்பவரிடம் இருந்து, கிரையம் பெற்றதாகவும், அதை இரண்டாக பிரித்து, 1,200 சதுர அடி நிலத்தை ரமேஷ்பாபு என்பவருக்கு கிரையம் செய்து கொடுத்ததாகவும் கூறினார்.

மீதமுள்ள, 1,200 சதுர அடி நிலத்தை, நில தரகர்கள், சங்கர், பாலாஜி ஆகியோர் வாயிலாக, எனக்கு கிரையம் செய்து கொடுப்பதாக ஜெயபாலன் கூறினார். அந்த நிலத்திற்கு, 34 லட்சம் ரூபாய் விலை பேசி, 19.50 லட்சம் ரூபாயை ரொக்கமாகவும், 14.50 லட்சம் ரூபாயை மூன்று வரைவோலை வாயிலாக, கடந்த 2021ல் கொடுத்தேன்.

தனியே பத்திரப்பதிவு செலவாக, 4 லட்சத்தை ஜெயபாலனும், கமிஷனாக 50,000 ரூபாயை பாலாஜி என்பவரும் பெற்று கொண்டனர். பின், நிலத்தின் உரிமையாளர் கோயம்புத்துாரைச் சேர்ந்த முருகேசன் என்பதும், ஜெயபாலன், முருகேசன் என்கிற பெயர் கொண்ட நபரை வைத்து, போலியான ஆவணம் தயாரித்து, மோசடியில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து வழக்கு பதிந்து விசாரித்த இன்ஸ்பெக்டர் வள்ளி தலைமையிலான தனிப்படை போலீசார், தலைமறைவாக இருந்த ஜெயபாலனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *