குடிநீர், கழிவுநீர் இணைப்பு வழங்குவதில் கவுன்சிலர்கள்.. .அடாவடி ரூ.1,800 கோடியில் பணிகள் முடிந்தும் ஓராண்டாக சிக்கல்

சென்னை மாநகராட்சியில் 1,800 கோடி ரூபாயில் குடிநீர், கழிவுநீர் திட்டப் பணி முடிந்து ஓராண்டாகியும், வீடு, வணிக வளாகங்களுக்கு இணைப்பு கொடுக்க முடியாமல், குடிநீர் வாரியம் திணறி வருகிறது. குடிநீர், கழிவுநீர் லாரிகள் வைத்து, ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் கவுன்சிலர்கள், கட்சிகளின் நிர்வாகிகள் முட்டுக்கட்டை போடுவதால், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

சென்னையில், 24 மணி நேரமும் குடிநீர் வழங்க அரசு திட்டமிட்டு, அதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளது. மாநகராட்சி விரிவாக்கத்திற்கு முந்தைய மண்டலங்களில், ஏற்கனவே குடிநீர், கழிவுநீர் திட்டம் செயல்பாட்டில் உள்ளதால், அவை தேவைக்கேற்ப மேம்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்காக, கோடம்பாக்கம், அடையாறு மண்டலங்களில் விரிவான திட்ட அறிக்கையை, குடிநீர் வாரியம் தயாரித்து வருகிறது.

மாநகராட்சியில் புதிதாக சேர்ந்த மண்டலங்களிலும் குடிநீர், கழிவுநீர் திட்ட பணிகள் நடந்து வருகின்றன. தற்போது, 3,020 கோடி ரூபாயில் திட்ட பணிகள் நடந்து வருகின்றன.

இதில், கடந்த ஓராண்டில் மட்டும், 1,800 கோடி ரூபாயில் பணி முடித்து, குடிநீர், கழிவுநீர் இணைப்பு வழங்க, வாரியம் அழைப்பு விடுத்துள்ளது. ஆனால், மாதவரம், அம்பத்துார், வளசரவாக்கம், ஆலந்துார், பெருங்குடி, சோழிங்கநல்லுார் ஆகிய மண்டலங்களில், இணைப்பு வழங்குவதில் சிக்கல் நீடிக்கிறது.

குடிநீர், கழிவுநீர் லாரிகள் வைத்து, ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் சில கவுன்சிலர்கள் மற்றும் தி.மு.க., — அ.தி.மு.க., நிர்வாகிகள், இணைப்பு வழங்க இடையூறு செய்கின்றனர்.

உரிய முறையில் விண்ணப்பித்தால், ஒரு இணைப்புக்கு, 10,000 முதல் 50,000 ரூபாய் வரை, ‘கட்டிங்’ கேட்கின்றனர். இதனால், குடிநீர், கழிவுநீர் இணைப்பு பெற முடியாமல் பொதுமக்கள் தவிக்கின்றனர்.

அதேபோல், தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகள் – 2019ன் படி, வீட்டுக்கு 750 சதுர மீட்டர் பரப்பு மற்றும் வணிகத்திற்கு 300 சதுர மீட்டர் பரப்புக்கு மேல் இருந்தால், கட்டட நிறைவு சான்று தேவை.

இந்த சட்டம் வெளிவரும் முன், அப்போதைய உள்ளாட்சி நிர்வாகத்திடம் இணைப்பு பெற்றிருந்தால், வாரியம் புதிய இணைப்பை வழங்குகிறது. உரிய அனுமதியின்றி, ஆட்சேபனை இடத்தில் கட்டடம் கட்டி இணைப்பு பெறாமல், தற்போது இணைப்புக்கு விண்ணப்பித்தால், கட்டட நிறைவு சான்று கேட்கிறது.

விரிவாக்க மண்டலங்களில் வணிகம் மற்றும் பாதி வணிகம் எனும் வீடுடன் கூடிய கடைகள் அடங்கிய பல கட்டடங்கள், உரிய அனுமதி இல்லாமல் கட்டப்பட்டு உள்ளன. நீர்நிலைகளில் கட்டிய கட்டடங்களும் உள்ளன. இந்த கட்டடங்களுக்கு, இணைப்பு வழங்குவதில் சிக்கல் நீடிக்கிறது.

இதனால், விரிவாக்க மண்டலங்களில் பல கோடி ரூபாய் செலவு செய்தும், குடிநீர், கழிவுநீர் திட்டத்தை மக்களுக்கு கொண்டு சேர்க்க முடியாமல் வாரியம் திணறுகிறது.

குடிநீர் வாரிய உயர் அதிகாரிகள் கூறியதாவது:

குடிநீர், கழிவுநீர் இணைப்பு சேவையை ‘ஆன்லைன்’ வழியாக எளிதாக பெறலாம்.

வாரியம் விதித்த கட்டணத்தைவிட அதிகமாக, சில கவுன்சிலர்கள், வட்ட செயலர்கள், ‘கட்டிங்’ கேட்பதால், பலர் இணைப்பு பெற யோசிக்கின்றனர்.

கடந்த ஜனவரி மாதம், கட்டட நிறைவு சான்று கட்டாயம் என, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததால், பழைய பெரிய கட்டடங்களுக்கு இணைப்பு வழங்க முடியவில்லை.

இணைப்பு கட்டணத்தில் தான், திட்டத்திற்காக செலவழித்த வங்கி கடனை செலுத்த வேண்டும். குடிநீர், கழிவுநீர் லாரிகளுக்கு கடிவாளம் போட்டால், இணைப்பை வேகப்படுத்த முடியும். இதற்கு, அமைச்சர் நேரு தலையிட்டு தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அலைய வேண்டாம்!

கடந்த ஆட்சியில், ‘அழைத்தால் இணைப்பு, இல்லந்தோறும் இணைப்பு’ என்ற பெயரில், நேரடி விண்ணப்பம் முறை இருந்தது. இவை ஒரே குடையின் கீழ் வந்துள்ளன. இதன்படி, https://wsc.chennaimetrowater.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். சொத்துவரி, கட்டட வரைபடம், ஆதார், ரேஷன் அட்டை இருந்தால் போதும். விண்ணப்பித்ததும், கட்டடத்தை வார்டு பொறியாளர் ஆய்வு செய்த பின், ஒப்பந்ததாரர் வாயிலாக இணைப்பு வழங்கப்படும்.கட்டணத்தை ஆன்லைனிலே செலுத்தலாம். ஆனால், சில கவுன்சிலர்கள், வட்ட செயலர்கள் தலையீட்டால், சில வார்டுகளில் பொறியாளர்களே, ஆன்லைன் விண்ணப்பத்தை காரணம் இன்றி நிராகரிப்பது, கட்டணம் குறித்து பதிவேற்றாமல் காலம் தாழ்த்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *