ஒரே நேரத்தில் 4,000 மாணவர்கள் புத்தகம் வாசிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில், தமிழக அரசு சார்பில், நான்காவது புத்தகத் திருவிழா, இன்று முதல் வரும் 17ம் தேதி வரை, 11 நாட்கள் நடைபெற உள்ளது. புத்தகத் திருவிழாவில், 120 க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம் சார்பில், பல்வேறு முன்னெடுப்பு பணிகள் நடந்து வருகின்றன. அந்த வகையில், ஆவடி மாநகராட்சி கட்டடத்தில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், புத்தகத் திருவிழா குறித்த, ‘ராட்சத பலுான்’ கட்டி நேற்று பறக்கவிடப்பட்டது. இந்த பலுான் ஒரு வாரம் பறக்கவிடப்பட உள்ளது.
தொடர்ந்து, புத்தகங்கள் வாசிப்பதை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சி, கலெக்டர் பிரதாப் தலைமையில், ஆவடியில் உள்ள தனியார் கல்லுாரியில் நடந்தது. புத்தக வாசிப்பின் அவசியத்தை உணர்த்தும் வகையில், 4,000 மாணவ, மாணவியர் பங்கேற்று, ஒரே நேரத்தில் புத்தகங்கள் வாசித்தனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் நாசர், மாநகராட்சி மேயர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.