வெயில் அதிகரிப்பு வெப்ப வாதத்திற்கு தனி வார்டு
சென்னை, தமிழகத்தில் இயல்புக்கு மாறாக, இந்தாண்டு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனால், நீர்ச்சத்து இழப்பு, மயக்கம், தலைச்சுற்றல், ஹீட் ஸ்ட்ரோக் என்ற வெப்ப வாதம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் என, டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
வெப்ப அலை பாதிப்பை சமாளிக்க, அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், வெப்ப வாதத்திற்கு தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு, 10 படுக்கைகள், செயற்கை சுவாச கருவி வசதியுடன் இரண்டு படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
‘ஏசி’ வசதி, ஆக்சிஜன் வசதி, ஓ.ஆர்.எஸ்., கரைசல், ஐஸ் பாக்கெட்டுகள் மற்றும் மருந்து, மாத்திரைகள் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன. தற்போது வரை யாரும் அனுமதிக்கப்படவில்லை.
அதேநேரம் வெயில் தாக்கம் அதிகமாக இருந்து, அதிகம் பேர் வந்தாலும், தேவைக்கு ஏற்ப, படுக்கைகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என, டாக்டர்கள் தெரிவித்தனர்.