விவசாயிடம் ரூ.71 லட்சம் மோசடி குஜராத் வாலிபர்கள் இருவர் கைது
சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த நபரை, ஆன்லைன் வாயிலாக, டிஜிட்டல் அரெஸ்ட் செய்து, 71 லட்சம் ரூபாய் மோசடி செய்த, குஜராத் வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த, 56 வயதான விவசாயி ஒருவரை, மும்பையில் இருந்து, சி.பி.ஐ., அதிகாரி பேசுவதாக, பிப்., 17 ல், மர்ம நபர் தொடர்பு கொண்டுள்ளார்.
‘உங்கள் மீது, மும்பை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பண மோசடி வழக்குப்பதிவாகி உள்ளது. உங்களை ஆன்லைன் வாயிலாக கைது செய்துள்ளோம்.
நீங்கள் பண மோசடி செய்யவில்லை என்றால், நாங்கள் தெரிவிக்கும் வங்கி கணக்கிற்கு, 71 லட்சம் ரூபாயை அனுப்புங்கள்.
அதன்படி, 71 லட்சம் ரூபாயை விவசாயி அனுப்பி உள்ளார். அதன்பின், மர்ம நபர் தொடர்பை துண்டித்துவிட்டார்.
இதையடுத்து, தன்னிடம் பண மோசடி செய்யப்பட்டது குறித்து, விவசாயி, www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விசாரிக்குமாறு, திருவள்ளூர் மாவட்ட சைபர் குற்றத் தடுப்பு பிரிவுக்கு, கூடுதல் டி.ஜி.பி., சந்தீப் மிட்டல் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, தனிப்படை போலீசார், மோசடிக்கு பயன்படுத்திய வங்கி கணக்கை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில், குஜராத் மாநிலம், சூரத் நகரைச் சேர்ந்த சைபர் குற்றவாளிகள் சோஜித்ரா ஹிரென்,26; ரோகாட் மீட்குமார்,30 ஆகியோரை நேற்று கைது செய்துள்ளனர். இவர்களின் வங்கி கணக்கில் இருந்து, 5.66 லட்சம் ரூபாயை முடக்கி உள்ளனர்.