சித்தப்பாவை ‘ பேட்’டால் தாக்கிய மகனுக்கு சிறை

புதுவண்ணாரப்பேட்டை, சென்னியம்மன் கோவில் 4வது தெருவைச் சேர்ந்தவர் மாசிலாமணி. இவருக்கும், அவரது சகோதரர் தெய்வசிகாமணி, 55, என்பவருக்கும் இடையே, சொத்து பிரச்னை இருந்து வந்தது. இதுதொடர்பாக, கடந்த 2019 மார்ச் 20ல், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

அப்போது, தெய்வசிகாமணி, அவரது மனைவி விஜயலட்சுமி, 45, ஆகியோர், மாசிலாமணியை பிடித்து கொள்ள தெய்வசிகாமணியின் மகன் லோகேஷ், 26, கிரிக்கெட் மட்டையால் மாசிலாமணியை தாக்கினார். இதை தடுத்த மாசிலாமணியின் மனைவி குணபூசனமும் தாக்குதலுக்கு உள்ளானார்.

இதில் பலத்த காயமடைந்த இருவரும், சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர். இது குறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் விசாரித்தனர். இந்த வழக்கு, சென்னை 19வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆர்.ராஜ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. போலீசார் தரப்பில், அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் எஸ்.தனசேகரன் ஆஜரானார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, லோகேஷ் மீதான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதால், அவருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை, 2,000 ரூபாய் அபராதமும், தெய்வசிகாமணி, விஜயலட்சுமி ஆகியோருக்கு தலா 5,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *