செங்கை அ.தி.மு.க. , சார்பில் சிட்லப்பாக்கம் ஏரி சீரமைப்பு
சிட்லப்பாக்கம், கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது, சுற்றுச்சூழல் துறை சார்பில், 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, சிட்லப்பாக்கம் பெரிய ஏரியில் புனரமைப்பு பணி 2019ல் துவங்கியது.
துார் வாரி ஆழப்படுத்தப்பட்டது. நடைபாதை, சிறுவர் விளையாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளன. அதன்பின் பணியில் தொய்வு ஏற்பட்டது.
ஆனால், பச்சைமலையில் இருந்து ஏரிக்கு மழைநீர் வருவதற்கான ஏற்பாடு, சாக்கடை கழிவு கலப்பதை தடுத்தல் உள்ளிட்ட, 30 சதவீத பணிகள் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளன.
ஏரியை சீரமைக்காத தி.மு.க., அரசை கண்டித்து, சில மாதங்களுக்கு முன், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி சார்பில், இவ்வேரியில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை அகற்றும் பணி, கடந்த ஒரு வாரமாக நடந்து வந்தது.
மாவட்ட அ.தி.மு.க., செயலர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் தலைமையில், மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலர் புருஷோத்தமன், 34வது வார்டு கவுன்சிலர் சுபாஷினி ஆகியோர், தன் சொந்த நிதி 7 லட்சம் ரூபாயை கொண்டு, ஏரியை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
தினசரி, 10க்கும் மேற்பட்டோர் படகு வாயிலாக ஏரியில் படர்ந்திருந்த ஆகாயத்தாமரையை அகற்றி சுத்தம் செய்தனர்.