கோவில் கோபுரத்திலிருந்து விழுந்தவர் பலி

வாணுவம்பேட்டை, என்.எஸ்.கே., சாலையைச் சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகன் கார்த்திக் ராஜா, 24; எலக்ட்ரீஷியன். இவர், அதே பகுதியில் உள்ள பந்தல் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

மஹா சிவராத்திரியை முன்னிட்டு, நங்கநல்லுார், நான்காவது பிரதான சாலையில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலில், மின் விளக்குகள் அலங்காரம் செய்யும் பணியில், கடந்த 23ம் தேதி ஈடுபட்டிருந்தார்.

கோவில் கோபுரத்தில் மின் அலங்காரம் செய்ய, 15 அடி உயர சாரத்தில் ஏறி வேலை பார்த்தபோது, எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில், அவரின் தலையில் உள்காயம் ஏற்பட்டு, காதுகளில் ரத்தக்கசிவு ஏற்பட்டது.

உடனடியாக அவரை, ஆம்புலன்ஸ் வாயிலாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி, அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து, பழவந்தாங்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த கார்த்திக்ராஜாவிற்கு, திருமணமாகி மூன்று மாதங்களே ஆகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *