ஏர்போர்ட்டில் ‘ லாக்கர் ‘ வசதி பயணியருக்கு பெரிதும் உதவும்
சென்னை, சென்னை விமான நிலையத்தில், தினமும், 50,000க்கும் மேற்பட்ட பயணியர் வந்து செல்கின்றனர். இப்படி வரும் பார்வையாளர்கள் ஓய்வெடுக்க தனி இடம் கிடையாது.
இதையடுத்து, பயணியர் அமர்ந்து ஓய்வெடுக்கும் வகையில், ‘டி – 1’ வருகை முனையத்தின் எதிர்புறத்தில், 2023ல் பணிகள் துவங்கின.
கடந்தாண்டு இறுதியில் முடிந்திருக்க வேண்டும். இழுபறியாக இருந்த பணிகள் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
இதுகுறித்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:
வருகை முனைய பகுதியில், பயணியர் அமர்ந்து ஓய்வெடுக்கும் வகையில், இருக்கைகளுடன் கூடிய வசதிகள் வர உள்ளது. இதற்கான பணிகள் 90 சதவீதம் முடிந்துவிட்டது.
சில பயணியர் ஒரு நாள் பயணமாக சென்னை வந்து விட்டு திரும்புவர்.அவர்கள் உடைமைகளை வைத்துக் கொண்டு செல்வது சிரமமாக இருக்கும். இதை எளிமையாக்கும் வகையில், ‘டெபாசிட் லாக்கர்’ வசதிகள் வர உள்ளது.
இதனால் பயணியர் உடைமைகளை பத்திரமாக வைத்துவிட்டு, மற்ற இடங்களுக்கு சென்றுவிட்டு விமான நிலையம் திரும்பலாம்.
இந்த பணிகள் மார்ச் மாத இறுதிக்குள் நிறைவடைந்து, ஏப்ரலில் செயல்பாட்டிற்கு வரும். இந்த பகுதியில், சிறு உணவகங்கள் மற்றும் கடைகளும் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.