கழிப்பறை நீர் கலக்கும் கால்வாய் பெருங்குடியில் சுகாதார சீர்கேடு

பள்ளிக்கரணை:பள்ளிக்கரணை, ஆதிபுரிஸ்வரர் கோவில் தெரு, சிட்டிபாபு நகர், 4வது தெருவின் மைய பகுதியில், 1,000 அடி நீளம், மூன்று அடி அகலத்தில், பயன்பாடில்லாத ஒரு கால்வாய் உள்ளது.

இக்கால்வாய், பேரூராட்சியாக இருந்தபோது, அணை ஏரியிலிருந்து தாமரைக் குளத்திற்கு நீர் செல்வதற்காக, இந்தக் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டிற்கு முன், அணை ஏரிக்கும், கால்வாய்க்கும் இடையே உள்ள பகுதி மூடப்பட்டது. இதனால், கால்வாயில் ஏரி நீர் வருவது தடைபட்டது.

இதைப் பயன்படுத்தி, கால்வாயின் இருபுறமும் உள்ள வீடுகளில், சில வீட்டார், தங்கள் வீடுகளின் கழிவு நீர், கழிப்பறை நீரை இந்தக் கால்வாயில் கலக்கச் செய்தனர்.

இதனால், கொசு உற்பத்தி மிகுதியாகி, துர்நாற்றம் வீசத் துவங்கியது. பகுதிவாசிகள் சுகாதார சீர்கேட்டிற்கு ஆளாகத் துவங்கினர். கழிவு நீர் கலக்கும் வீட்டாரிடம் பலமுறை புகார் அளித்தும், அவர்கள் தொடர்ந்து அதே தவறை தொடர்கின்றனர்.

இதுகுறித்து, நம் நாளிதழில் பிப்., 13ல் செய்தி வெளியானதை அடுத்து, இரண்டு நாட்களாக, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், கால்வாயை நேரில் சென்று பார்வையிட்டனர்.

பின், கால்வாயில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றியுள்ளனர். விரைவில் கால்வாயை மண் கொட்டி மூட நடவடிக்கை எடுப்பதாக, அப்போது மக்களிடம் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *