மளிகை கடை சூறை இருவர் கைது
சென்னை:அபிராமபுரம், காமராஜர் சாலை பகுதியில், திரிபுரசுந்தரி என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரின் கடையில், சபரிநாதன் என்பவர் வேலை செய்து வருகிறார்.
இந்த கடைக்கு சென்ற அதே பகுதியைச் சேர்ந்த புஷ்பலதா என்பவர், மளிகை பொருட்கள் வாங்கியுள்ளார்.
இதற்காக, 100 ரூபாய் கொடுத்ததாக சபரிநாதனிடம் கூறியுள்ளார். ஆனால் அவர், நீங்கள் 50 ரூபாய் தான் கொடுத்தீர்கள் என, கூறியுள்ளார். இதில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால், கடையில் தற்போது கூட்டமாக உள்ளது. நீங்கள் அப்புறம் வாருங்கள், ‘சிசிடிவி’ பார்த்து சரி பார்த்துக்கொள்ளலாம் என, கூறியுள்ளார்.
மேலும், புஷ்பலதா 100 ரூபாய் கொடுத்ததாகவே கணக்கிட்டு, 49 ரூபாய் போக, மீதி 51 ரூபாயை கொடுத்துள்ளார்.
எனினும், புஷ்பலதா தன் கணவர் சண்முகவேல், 37, மற்றும் உறவினர் சத்யராஜ், 37 ஆகியோரிடம், நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார்.
ஆத்திரமடைந்த, சண்முகவேல், சத்யராஜ் இருவரும், மளிகை கடையை சூறையாடிதுடன், அதன் உரிமையாளர் மற்றும் ஊழியரையும் தாக்கியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து, அமிராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சண்முகவேல், சத்யராஜ் ஆகியோரை நேற்று கைது செய்துள்ளனர்.