மணலியில் அடிக்கடி மின்தடை மக்கள், வணிகர்கள் கடும் அவதி

மணலி:மணலி மண்டலத்தில், எட்டு வார்டுகள் உள்ளன. இங்குள்ள குடியிருப்புகள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு, தரை மற்றும் வான்வழி மின்வடம் வாயிலாக மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை துவங்கி மதியம் வரை, நான்கு முறைக்கு மேல், மணலி – பாடசாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. வெயில் சுட்டெரிக்கும் நேரத்தில் மின்தடை ஏற்பட்டதால், மக்கள் புழுக்கம் தாளாமல் கடும் அவதியுற்றனர்.

தவிர, மின்சாரத்தை நம்பியுள்ள சிறு, குறு தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன. மதியம் 1:15 மணிக்கு தடைபட்ட மின்சாரம், 2:20 மணிக்கு சீரடைந்தது.

மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘மணலி – எம்.எப்.எல்., சந்திப்பு அருகே, மின்மாற்றியில் இருந்து, மின்சாரம் வினியோகமாகும் இடத்தில் பழுது ஏற்பட்டது. உடனடியாக சரி செய்யப்பட்டது’ என்றனர்.

மணலி மண்டலத்தில் மின்தடை ஏற்படும்பட்சத்தில், அவசர காலங்களில், பயன்படுத்தும் வகையில், கவுன்சிலர்கள் அலுவலகத்தில் ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *