பள்ளியில் தவறி விழுந்ததால் காலில் அடிபட்டு சிகிச்சை பெற்ற 7 வயது சிறுமி திடீர் மரணம்: மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை
பெரம்பூர், பிப்.22: கொளத்தூர் ஜி.கே.எம் காலனியை சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மனைவி ரோஜா. இவர்களது மூத்த மகள் பாவனா (7), கொளத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு பள்ளியில் கீழே விழுந்ததில் பாவனாயின் கால் முட்டியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். அப்போது, எக்ஸ்ரே எடுத்து பார்த்த மருத்துவர்கள், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சென்று பரிசோதியுங்கள் என கூறியுள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, பாவனாயை அவரது பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செனறு காண்பித்து சிகிச்சை அளித்து, வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். நேற்று காலை சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. திடீரென்று சுயநினைவிழந்த சிறுமியை, மீண்டும் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறி துடித்தனர்.
இதையடுத்து சிறுமியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, மருத்துவர்களின் அலட்சியத்தால் சிறுமி இறந்ததாக கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். தகவலறிந்து வந்த போலீசார், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில் அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
சிறுமியின் பெற்றோர் கூறுகையில், ‘‘எங்களது மகளுக்கு பெரிய பாதிப்பு ஏதும் இல்லை என மருத்துவர்கள் கூறினர். அப்போதே எமர்ஜென்சி என கூறியிருந்தால் எழும்பூர் அரசு மருத்துவனைக்கு சென்றிருப்போம். எங்களது மகள் இறப்புக்கு காரணமான மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்,’ என்றனர். மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறுகையில், ‘சிறுமியை எழும்பூருக்கு அழைத்து செல்லுமாறு ஏற்கனவே கூறினோம். ஆனால் அவர்கள் அழைத்து செல்லவில்லை,’ என்றனர்.