உளவு சொன்னவருக்கு வெட்டு ஐந்து வாலிபர்களுக்கு சிறை
திருவான்மியூர், ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் புருஷோத்தமன், 20. இவர், திருவான்மியூர் காவல் நிலையத்தில், ‘பிரண்ட்ஸ் ஆப்’ போலீஸ் குழுவில் பணிபுரிந்து வந்தார்.
கடந்த, 2020 மே 27ல், திருவான்மியூரைச் சேர்ந்த பிரபு, 19, உள்ளிட்டோர், குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக, தங்களை பற்றி போலீசாரிடம் போட்டுக் கொடுக்கிறீயா? எனக்கூறி, புருஷோத்தமனை கத்தியால் வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த புருஷோத்தமன், சிகிச்சைக்கு பின் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
இதுகுறித்த புகாரின்படி திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரபு, கணேஷ், 19, மேகநாதன், 20, அபி, 19, கோவிந்தா, 21, ஆகியோரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, சென்னை 5வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கே.கீதாராணி முன் நடந்தது. போலீசார் தரப்பில், அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பகவதிராஜ் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, பிரபு உள்ளிட்ட ஐந்து பேர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி, அரசு தரப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதால், அவர்களுக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை, மொத்தம் 57,500 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.