3 மாதங்களாக சம்பளம் தரவில்லை துாய்மை பணியாளர்கள் முற்றுகை
ராயபுரம்:ராயபுரம் மண்டலத்தில் பணியும், ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் நேற்று, மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மூன்று மாதங்களாக, ஒப்பந்த நிறுவனம், தங்களுக்கு சம்பளம் வழங்கவில்லை என, கோஷம் எழுப்பினர்.
தகவலறிந்து வந்த வண்ணாரப்பேட்டை போலீசார் மற்றும் மண்டல உதவி செயற்பொறியாளர் பழனி, அவர்களிடம் பேச்சு நடத்தினர். சில நாட்களில் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை அடுத்து, அனைவரும் கலைந்தனர்.
துாய்மை பணியாளர்கள் கூறியதாவது:
பிராட்வே பேருந்து நிலையத்தில், துாய்மை பணிக்கு காலை, மதியம் ஆறு பேரும், இரவு எட்டு பேரும், சுழற்சி அடிப்படையில் துாய்மை பணி மேற்கொண்டோம்.
மூன்று மாதங்களாகியும், பணிக்கான சம்பளம் வழங்கப்படவில்லை. பல துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை.
மாதம் 15,000 ரூபாய் தருவதாக கூறிய நிலையில், அதையும் தராமல் இழுத்தடித்து வருகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் தலையிட்டு, சம்பளத்தை வாங்கி தரவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.