ஓனரை தாக்கி ஹோட்டல் சூறை போதை வாலிபர்கள் 3 பேர் கைது

அண்ணா நகர் :அம்பத்துாரைச் சேர்ந்தவர் முகமது அபுபக்கர், 30. இவர், அண்ணா நகர் 2வது அவென்யூவில், ‘மீட் அண்ட் ஈட்’ என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.

இவரது ஹோட்டலுக்கு, நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் வந்த மூவர், பல உணவுகளை சாப்பிட்டனர். பின், ஊழியரிடம் கழிப்பறைக்கு செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

கடையில் கழிப்பறை வசதியில்லை என அபுபக்கர் கூறவே, ஆத்திரமடைந்த போதை ஆசாமிகள், அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்து, ஹோட்டலை சூறையாடினர். தடுக்க வந்த கடையின் உரிமையாளரான முகமது அபுபக்கரையும் தாக்கி தப்பினர்.

இது குறித்து விசாரித்த அண்ணா நகர் போலீசார், அம்பத்துாரைச் சேர்ந்த சாய் திவாகர், 27, ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்த கார்த்திக், 25, கிழக்கு அண்ணா நகரைச் சேர்ந்த சக்திவேல், 25, ஆகிய மூன்று பேரை, நேற்று காலை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *