ஏர்போர்ட் எஸ்.ஐ., உயிரிழப்பு மகன் மீது கொலை வழக்கு

நீலாங்கரை இ.சி.ஆர்., பாலவாக்கத்தைச் சேர்ந்தவர் விஜயபாஸ்கர், 48; சென்னை விமான நிலையத்தில், எஸ்.பி.சி.ஐ.டி.,யில், உதவி ஆய்வாளராக பணிபுரிந்தார். இவரது மகன் சுகாஸ், 21.

குடும்ப பிரச்னை தொடர்பாக, தந்தைக்கும் மகனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம், 25ம் தேதி இரவு நடந்த பிரச்னையில், சுகாஸ், தந்தை முகத்தை கையால் அடித்தும், சுவரில் இடித்தும் தாக்கினார்.

இதில், விஜயபாஸ்கரின் தாடை உள்ளிட்ட உறுப்புகள் காயமடைந்தன. நீலாங்கரை போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிந்து, சுகாஸை கைது செய்தனர்.

அடையாறில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற விஜயபாஸ்கர், நேற்று, சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து போலீசார், சுகாஸ் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *