வெள்ள பாதிப்பில் சிக்கும் மக்கள் துரைப்பாக்கத்திற்கு விடிவு எப்போது?
துரைப்பாக்கம், சோழிங்கநல்லுார் மண்டலம், 195வது வார்டில், 70 கி.மீ., துாரத்தில் 327 தெருக்கள் உள்ளன. ஒவ்வொரு தெருவும், 16 முதல் 30 அடி அகலம் உடையவை.
இதில், 120 தெருக்கள் தாழ்வாக இருப்பதுடன், லேசான மழைக்கே வெள்ள பாதிப்பு ஏற்படும். இந்த தெருக்களில், 81 தெருக்கள் வழியாக வடியும் மழைநீர் பகிங்ஹாம் கால்வாயிலும், 39 தெருக்களில் வடியும் மழைநீர் சதுப்பு நிலத்திலும் சேர்கிறது.
ஒக்கியம் – துரைப் பாக்கத்திற்கு உட்பட்ட சந்திரசேகரன் அவென்யூ, நேருநகர், பல்லவன்குடியிருப்பு, பாலாஜிநகர், சூளைமாநகர், குமரன்குடில்நகர், தேவராஜ் அவென்யூ போன்ற தாழ்வான பகுதிகள் அதிக வெள்ள பாதிப்புக்கு உள்ளாகின்றன.
இப்பகுதிவாசிகள் மிதமான மழைக்கே, தெருக்களில் வெள்ளம் தேங்கி, வெளியே செல்ல முடியாத நிலை ஏற்படுவது வழக்கம்.
இதனால், வடிகால் கட்ட வேண்டும் என, கடந்த 2022ம் ஆண்டு முதல் இப்பகுதியினர் கோரி வருகின்றனர்.
இது குறித்து இப்பகுதியினர் கூறியதாவது:
அடுத்த பருவமழைக்காவது, தாழ்வான தெருக்களில் வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘நிதி ஒதுக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடியால், 195வது வார்டில், வடிகால் கட்ட முடியவில்லை. இந்த நிதியாண்டில், போதிய நிதி ஒதுக்கி அதிக வெள்ள பாதிப்புக்கு உள்ளாகும் தெருக்களில் வடிகால் கட்டப்படும்’ என்றனர்