பல்லாவரம் அருகே சோகம் : கணவரை பிரிந்து வாழ்ந்ததால் மன உளைச்சல் பல் மருத்துவர் தீக்குளித்து தற்கொலை

பல்லாவரம், பிப்.1: பல்லாவரம் அடுத்த ஜமீன் பல்லாவரத்தில் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த பல் மருத்துவர், மன உளைச்சல் காரணமாக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
மதுரையை சேர்ந்தவர் தனலட்சுமி (43). பல் மருத்துவரான இவருக்கு, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், அதே பகுதியை சேர்ந்த பாலவெங்கடேஷ் (45) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தனலட்சுமி கடந்த ஆண்டு கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று, தனிமையில் வசித்து வந்தார்.

பின்னர், கடந்த 4 மாதங்களுக்கு முன், சென்னை கோட்டையில் உள்ள பல் மருத்துவமனையில் உதவி பேராசிரியராக பணியில் சேர்ந்தார். இதனால், ஜமீன் பல்லாவரம், பாரதி நகர் 4வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கி, அதில் தனியாக வசித்து வந்தார். தினமும் காலையில் வேலைக்குச் சென்றால், இரவு வீடு திரும்புவதை தனலட்சுமி வழக்கமாக கொண்டிருந்தார். கணவரை பிரிந்த சோகத்தில், கடந்த சில தினங்களாக அவர் கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நேற்று முன்தினம் இரவு மதுரையில் உள்ள தனது சகோதரர் துரை கதிர்வேலுக்கு போன் செய்து, தான் கடும் மன உளைச்சலில் இருப்பதாகவும், தனக்கு வாழ பிடிக்கவில்லை என்றும் கூறி அழுதுள்ளார். அவருக்கு சகோதரர் துரை கதிர்வேல் ஆறுதல் கூறியுள்ளார்.

இந்நிலையில், அவரிடம் பேசிய சில மணி நேரங்களில் தனலட்சுமி, வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து, தனது உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதில் உடல் கருகி, துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலில் பற்றிய தீ, வீட்டில் பரவி ஏசி, பிரிட்ஜ் போன்ற மின்சாதன பொருட்கள் மீதும் பற்றியது. இதில், பிரிட்ஜ், ஏசி போன்ற மின்சாதனங்கள் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறின. இதனால் அப்பகுதி எங்கும் புகை மூட்டமாக காணப்பட்டது. நள்ளிரவு நேரத்தில் வெடிச்சத்தம் போன்ற பயங்கர சத்தம் கேட்டதால், அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து பல்லாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பல் மருத்துவர் தனலட்சுமி உடல் கருகிய நிலையில் இறந்து கிடப்பது தெரியவந்தது. உடனடியாக அவரது சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அந்த வீட்டை போலீசார் சோதனை செய்து பார்த்தபோது தனலட்சுமி உடல் கிடந்த இடத்தின் அருகிலேயே மண்ணெண்ணெய் கேன் மற்றும் தீப்பெட்டி ஆகியவை இருந்தது. இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், தனலட்சுமி தற்கொலை செய்து கொண்டதற்கு வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த பல் மருத்துவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *