காலை சிற்றுண்டி தனியார் வசம் சென்னை மாநகராட்சி உறுதி
காலை சிற்றுண்டி திட்டம் தனியாரிடம் தான் விடப்படும் என, மாநகராட்சி உறுதிப்படுத்தி உள்ளது.
சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் இயங்கும், 356 பள்ளிகளில், ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும், 49,147 மாணவர்கள் காலை சிற்றுண்டி திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர். இதற்காக, 35 ஒருங்கிணைந்த சமையல் கூடம் அமைக்கப்பட்டு, மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாயிலாக உணவு தயாரிக்கப்பட்டு, வினியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், காலை சிற்றுண்டி திட்டத்தை தனியார் வசம் ஒப்படைக்கும் வகையில், சென்னை மாநகராட்சி, 13.73 கோடி ரூபாயில் டெண்டர் கோரியுள்ளது.
இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியதால், மறுபரிசீலனை செய்யப்படும் என, மேயர் பிரியா தெரிவித்தார். இதை மாநகராட்சி அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை மாநகராட்சி தவிர, மற்ற பகுதிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை, தனியார் நிறுவனங்கள்தான் மேற்கொண்டு வருகின்றன. அவ்வாறு சென்னை மாநகராட்சியும் மேற்கொள்ள, தமிழக சமூக நலத்துறை பரிந்துரை செய்துள்ளது. இதற்காக, மாநகராட்சி கவுன்சில் கூட்டம் மற்றும் தமிழக அரசிடம் முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளது.
மேலும், தனியார் வசம் ஒப்படைப்பது அரசின் கொள்கை முடிவு. இதில், மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்றால், தமிழக அரசு தான் செய்ய வேண்டும். எனவே, திட்டமிட்டப்படி, காலை சிற்றுண்டி திட்டம், தனியார் வசம் தான் ஒப்படைக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.