புற்று நோயால் பாதிக்கப்பட்ட 80 வயது மூதாட்டி தீக்குளிப்பு
பெரம்பூர்: வியாசர்பாடி தாமோதரன் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் மாரி. இவரது மனைவி வீரம்மாள் (80). இவர்களுக்கு 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். அனைவரும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். வீரம்மாளுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்பட்டு, கடந்த 5 ஆண்டாக இதற்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்த வீரம்மாள், நேற்று அதிகாலை வீட்டில் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் ஷோபா என்பவர் ஓடிவந்து எம்கேபி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து வீரம்மாளின் மூத்த மகன் கன்னியப்பனுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வீரம்மாளை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் வீரம்மாள் தீயில் கருகி உயிரிழந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.