ஆம்னி பஸ்சில் வந்த ஓய்வு டி.எஸ்.பி., உயிரிழப்பு
கோயம்பேடு,தேனி மாவட்டம், மேல கூடலுாரை சேர்ந்தவர் மகேந்திரன், 65. இவர், திருவாரூர் பகுதியில் டி.எஸ்.பி.,யாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று முன்தினம் கூடலுாரில் இருந்து, சென்னைக்கு ஆம்னி பேருந்தில் வந்தார்.
கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் வந்தடைந்தும், பஸ்சில் இருந்து இறங்காமல் இருந்தார். ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது அவர் உயிர் இழந்தது தெரிய வந்தது.
கோயம்பேடு போலீசார் மகேந்திரன் உடலை மீட்டனர்.
அவருக்கு ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்துள்ளதும், சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தபோது உயிர் இழந்ததும் தெரிய வந்தது.
மாரடைப்பால் உயிர் இழந்தாரா; வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில், போலீசார் விசாரிக்கின்றனர்.