இலங்கை பயணியிடம் ரூ.11 லட்சம் பறிமுதல்
சென்னை:சென்னையில் இருந்து, விமானத்தில் இலங்கைக்கு கடத்த முயன்ற 11 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு, மூவரின் பயணம் ரத்து செய்யப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து, இலங்கை செல்லும் ‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ விமானம், நேற்று முன்தினம் புறப்பட தயாராக இருந்தது.
அதில் பயணம் செய்ய வந்த, கோவர்தன் கிஷோர் குமார், 32, கோவர்தன் பாலாஜி, 35, மற்றும் ஜோனாலாகூடா, 30, ஆகியோரின் உடைமைகளை, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், 11 லட்சம் ரூபாய் இந்திய நோட்டுகள் இருந்தது தெரியவந்தது.
இந்த நோட்டுகளை கடத்த முயன்ற, மூவரின் பயணம் ரத்து செய்யப்பட்டு, 11 லட்சம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது. மூவரும் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, தொடர் விசாரணையில் உள்ளனர்.