பறிமுதல் வாகனங்கள் மழை, வெயிலில் நாசம்
திருமங்கலம்:பல்வேறு வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்படும் போது, அவர்கள் குற்ற சம்பவத்தின் போது பயன்படுத்திய வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.
நீதிமன்றத்தில் வழக்கு முடிந்த பின், இந்த வாகனங்களின் முறையான ஆவணங்களைக் காண்பித்து, அதன் உரிமையாளர்கள் எடுத்துச் செல்ல முன்வருவதில்லை.
இதுபோன்று, நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பான வாகனங்கள் பல ஆண்டுகளாக, திருமங்கலம் காவல் நிலையத்தின் அருகே உள்ள சாலையோரத்தில், குப்பை போல் ஒன்றின்மேல் ஒன்றாக குவித்து வைக்கப்பட்டு உள்ளன.
அவற்றை முறையாக அனுமதி பெற்று, ஏலம் விட வேண்டும். ஆனால், அவை ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டு கிடப்பதால் மழையிலும், வெயிலிலும் வீணாகி வருகின்றன.
இதனால், பல லட்சம்ரூபாய் மதிப்பிலான வாகனங்கள், மீண்டும் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியுள்ளன. சாலையோரத்தில் கேட்பாரற்று கிடப்பதால், உதிரி பாகங்களும் திருடு போக வாய்ப்பு உள்ளது.
எனவே, வழக்கு முடிந்த பின், உரியவர்களிடம் ஒப்படைக்கவோ அல்லது ஏலம் விடவோ, சம்பந்தப்பட்ட போலீஸ் உயரதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.