சைதையில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறும் சிறு கடைகள்
சைதாப்பேட்டை:சைதாப்பேட்டை ஜீனிஸ் சாலையில் இருந்த நடைபாதை வியாபாரிகளுக்காக, 1998ல், சைதாப்பேட்டை காய்கறி சந்தை பின்புறம், 131 சிறு கடைகள் கொண்ட விநாயகம்பேட்டை சந்தை கட்டப்பட்டது. சந்தையை, மாநகராட்சி மேயராக இருந்த ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ஆனால், இந்த கடைகளை வியபாரிகளுக்கு பதிலாக, அரசியல்வாதிகள் வாங்கியதாக கூறப்படுகிறது. காலப்போக்கில் அந்த கடைகள் பயன்பாடின்றி உள்ளன. அப்பகுதி முழுதும், இரவில் மின் விளக்கு இன்றி, இருள் சூழ்ந்து காட்சியளிக்கிறது. தற்போது, அப்பகுதியில் இரவு பகல் மது கூடமாகவும், கஞ்ச புகைப்பது என, சமூக விரோத செயல்கள் நடைபெறும் இடமாக மாறி உள்ளது.
இதை, போலீசாரும் கண்டு கொள்ளாமல் உள்ளனர். அப்பகுதி முழுதும் குப்பை குவிக்கப்பட்டு, திறந்தவெளியில் சிறுநீர் கழிப்பதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இதற்கு தீர்வு காண வேண்டுமென, அப்பகுதி வாசிகள் கோரியுள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘இந்த வளாகம், சைதாப்பேட்டையில் அமைய உள்ள புது காய்கறி மார்க்கெட்டின் வாகன நிறுத்தமாக மாற உள்ளது’ என்றனர்.