எழும்பூரில் குழந்தைகள் திறனை கொண்டாட புகைப்பட கண்காட்சி
சென்னை:சென்னை எழும்பூர் அருங்காட்சிய திறந்தவெளியில் புகைப்பட கண்காட்சி நடந்து வருகிறது. இந்த கண்காட்சியின் விசேஷம் என்னவென்றால், 18 வயதிற்கு உட்பட்ட, உலகம் முழுதும் உள்ள குழந்தைகள் எடுத்த புகைப்படங்கள், காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
‘சென்னை போட்டோ பினாலே’ புகைப்பட அமைப்பு நடத்தும் இந்த புகைப்பட கண்காட்சியில், 200க்கும் அதிகமான புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இதில், சென்னை மாநகராட்சி பள்ளி மாணவியர் எடுத்த புகைப்படங்கள் பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.
தீப்பெட்டி தொழிற்சாலையில் பணியாற்றும் பெண் தொழிலாளர்கள், பட்டாசு ஆலை தொழிலாளர்கள், குழந்தை தொழிலாளர்கள் என்று பல்வேறு கோணங்களில் மிகத்திறம்பட படம்பிடித்துள்ளனர்.
பெரும்பாலான படங்கள் மொபைல்போன் வாயிலாக எடுக்கப்பட்டவை. இந்த குழந்தைகளுக்கு போட்டோகிராபியில் ஆர்வம் ஏற்படுத்திவிட்டால் போதும், பின்னர் தொழில்முறை கேமராவில் படம்பிடிக்க ஆரம்பித்துவிடுவர் என்று, இதன் அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
கண்காட்சி வருகின்ற மார்ச் 16 வரை நடைபெறும். அனுமதி இலவசம். காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணிவரை பார்வையிடலாம். வெள்ளிக்கிழமை விடுமுறை.