ரவுடி கொலையில் மேலும் 4 பேர் கைது
காசிமேடு திடீர் நகர், 2வது தெருவைச் சேர்ந்தவர் உலகநாதன், 33; ரவுடி. இவர், கடந்த 14ம் தேதி வீட்டில் இருந்தபோது, மர்ம நபர்கள் அவரை வெட்டி கொலை செய்தனர். தடுக்க முயன்ற அவரது மனைவி மாலதி, 30, என்பவருக்கும் வெட்டு விழுந்தது.
ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாலதி, அங்கு உயிரிழந்தார்.
இது தொடர்பாக, அதே பகுதியை சேர்ந்த வல்லரசு, 27, அவரது கூட்டாளிகளான ஆண்டனி, 21, எபினேசர், 24, எழிலரசன், 19, மனோஜ், 19, உள்ளிட்ட ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், ரவுடி உலகநாதன் கூட்டாளிகள், வல்லரசையும், அவரது கூட்டாளிகளை கொலை செய்ய திட்டமிடுவதாக காசிமேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இது தொடர்பாக, திடீர் நகரைச் சேர்ந்த கோபி என்கிற வெங்கடேசன், 32, ஆகாஷ், 29, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த கிஷோர்குமார், 29, செல்வதுரை, 19, ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
போலீசாரிடம் இருந்து தப்பிய கிஷோர் குமார், ஆகாஷ், கோபி ஆகிய மூவரும், சுவர் ஏறி குதிக்க முயன்றனர். அப்போது கீழே விழுந்ததில், வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
போலீசார் மூவரையும் மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். இவர்கள் மூன்று பேர் மீதும் ஏற்கனவே வழக்குகள் உள்ளன.