மலை வாசஸ்தலத்தை கண்முன் நிறுத்திய மலர் கண்காட்சி: 1.20 லட்சம் பேர் ரசிப்பு
சென்னை:செம்மொழி பூங்காவில் நடந்த சென்னை மலர் கண்காட்சியை 1.20 லட்சம் பேர் கண்டு ரசித்துள்ளனர்.
தேனாம்பேட்டை செம்மொழி பூங்காவில் தோட்டகலைத் துறை வாயிலாக, 4வது மலர் கண்காட்சி 2ம் தேதி துவங்கியது. இங்கு, 15 லட்சம் செடிகளுடன் கூடிய மலர்களை பயன்படுத்தி, யானை, முதலை, மயில், ரயில், கார் உள்ளிட்ட உருவங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
ஆங்காங்கே இதயம் உள்ளிட்ட பல வடிவங்களில் வரவேற்பு நுழைவாயில்களும் அமைக்கப்பட்டு இருந்தன. மலர் கண்காட்சியை பார்வையிடுவதற்கு, பெரியவர்களுக்கு 200 ரூபாயும், சிறியவர்களுக்கு 150 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. மலர் கண்காட்சி பணியில் தோட்ட தொழிலாளர்கள், தோட்டக்கலை மாணவர்கள் உள்ளிட்ட நுாற்றுக்கணக்கானோர் ஈடுபட்டனர்.
சென்னையை மலைவாசஸ்தலம் போல மாற்றிய இந்த மலர் கண்காட்சி, நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.
கடந்த 18 நாட்களாக நடந்த இந்த மலர் கண்காட்சியை 1.20 லட்சம் பேர் பார்வையிட்டு ரசித்துள்ளனர். இறுதி நாளான நேற்று 5,484 பேர் பார்வையிட்டனர்.
இந்த மலர் கண்காட்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இன்று முதல் பெரியவர்களுக்கு 100 ரூபாய், சிறியவர்களுக்கு 50 ரூபாய், கட்டணத்தில் பூங்காவை கண்டுகளிக்கலாம்.
மலர் கண்காட்சிக்கு அமைக்கப்பட்ட பல்வேறு உருவ கட்டமைப்புகள் அப்படியே விடப்படும் என தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்தனர்.