500 சதுர அடிக்கு ரூ.3 லட்சம் பேரம் போலி டோக்கன் போட்டு முளைத்த ஆக்கிரமிப்புகள்
ஆவடி, கொரட்டூர், திருவேற்காடு, அம்பத்துார் உள்ளிட்ட பகுதியில் ஆக்கிரமித்து வீடு கட்டியவர்களை அகற்றி, ஆவடி, மோரை ஊராட்சி, புதிய கன்னியம்மன் நகரில், 2009ல் மறு குடியமர்த்தப்பட்டனர். இவர்களுக்கு, தாசில்தார் சார்பில் முத்திரையிடப்பட்ட டோக்கன்களும் வழங்கப்பட்டன.
இந்நகரில், ‘ஏ’ முதல் ‘டி’வரையிலான பிளாக்குகளில் 2,800க்கும் மேற்பட்ட குடியிருப்பு மனைகள் உள்ளன. ஒவ்வொரு குடும்பத்திற்கும் 450 சதுர அடி ஒதுக்கப்பட்டது.
இங்கு பொது பயன்பாட்டிற்கும், பள்ளி, பேருந்து நிலையம், அங்கன்வாடி மையம், சுடுகாடு கட்டுவதற்கும் இடம் ஒதுக்கப்பட்டது.
இப்பகுதியில் 10 ஆண்டுகளாக தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் நடந்து வந்தது. இதுகுறித்து நம் நாளிதழிலும் செய்திகள் படத்துடன் வெளியாகின. பகுதி பொதுநலச்சங்கத்தினரும் சம்பந்தப்பட்ட தாசில்தார் மற்றும் கலெக்டருக்கு புகார் கடிதம் அனுப்பினர்.
இந்நிலையில், கடந்தாண்டு இறுதியில் ஆக்கிரமிப்பாளர்களை கண்டறியும் வகையிலும், பயனாளிகளுக்கு பட்டா வழங்கவும், வருவாய்துறை சார்பில்
கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பின் மழை காரணமாக, கணக்கெடுப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தற்போது வரை அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை
இதனிடையே, மோரை பகுதி ஊராட்சி நிர்வாகிகளின் பதவிக்காலம், கடந்த 5ம் தேதியுடன் முடிந்த நிலையில், புதிய கன்னியம்மன் நகரில் உள்ள பொது பயன்பாட்டு இடத்தில், சிலர் 500 சதுரடி வீதம், இடத்தை இரும்பு ஷீட்டால் கொட்டகை போட்டு ஆக்கிரமித்துள்ளனர். சிலர் குடிசை போட்டுள்ளனர்.
இவ்வாறு 30க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து பொதுநலச்சங்கத்தினர் கூறியதாவது:
இப்பகுதியில் 8,000 வாக்காளர்கள் உள்ளனர். 15,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கான பட்டா, 14 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை.
இந்நிலையில், ஊராட்சி நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிந்த நிலையில், சி பிளாக்கில் மசூதி மற்றும் பிள்ளையார் கோவில் பின்புறம், திடீர் ஆக்கிரமிப்புகள் உருவாகியுள்ளன.
இதற்காக ஒவ்வொரு வீட்டுக்கும், சிலர் மூன்று லட்சம் ரூபாய் பேரம் பேசி வாங்கியுள்ளனர். இதற்காக போலி டோக்கன்களை உருவாக்கி, முன்பணமாக 1.5 லட்சம் ரூபாய் பெற்றுள்ளனர்.
நுாலகம், சமுதாயகூடம் கட்ட வேண்டிய பொது பயன்பாட்டு இடத்தை ஆக்கிரமித்துள்ளனர். இதுகுறித்து, தாசில்தார் மற்றும் கலெக்டரிடம் புகார் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.