பேரவையில் எஸ். ஆர். ராஜா எம்எல்ஏ வலியுறுத்தல் வண்டலூர் – கேளம்பாக்கம் இணைப்பு சாலையை இருவழி பாதையாக மாற்ற வேண்டும்

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா (திமுக) பேசுகையில், தாம்பரம் மிக வேகமாக வளர்ந்து வரும் பகுதியாக இருப்பதால், காஞ்சிபுரமாக இருந்தாலும், திருவள்ளூராக இருந்தாலும், மாமல்லபுரமாக இருந்தாலும், நிமிடத்தில் செல்லக்கூடிய வசதி உள்ளது. இங்கு, மப்பேடு பகுதியில் இருந்து வெங்கப்பாக்கம், வண்டலூர் – கேளம்பாக்கம் இணைப்பு சாலையை ஒட்டிய பகுதிகள் வேகமாக வளர்ந்து வருகின்றன.

இந்த சாலையில் பிரபல பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டவை அமைந்துள்ளன. தினசரி ஏராளமான வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றன. இதனால், போக்குவரத்து நிறைந்து காணப்படுகிறது. எனவே, இந்த சாலைகளை இருவழிப் பாதையாக மாற்றிக் கொடுத்தால், அந்தப் பகுதி மக்களுக்கும், பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியருக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும்.

தாம்பரம் பகுதியைப் பொறுத்தவரையில், இந்த ஒரே ஒரு கோரிக்கை தான் தற்போது இருக்கிறது, என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், உறுப்பினர் கேட்டிருக்கின்ற கேள்வி, மிக முக்கியமானது. அதன் முக்கியத்துவம் கருதி, இந்த ஆண்டிலேயே அந்தச் சாலை அமைப்பதற்கான திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்படும், என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *