குன்றத்துார், மவுலிவாக்கம் சாலைகள் படுமோசம்
குன்றத்துார், குன்றத்துாரில் இருந்து ஸ்ரீபெரும்புதுார் செல்லும் சாலையை பயன்படுத்தி, தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.
குன்றத்துார் அருகே சிறுகளத்துாரில், இந்த சாலை பல இடங்களில் சேதமாகி, குண்டும் குழியுமாக உள்ளது. லேசான மழை பெய்தாலே, சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது.
விபத்து அபாயம்
குன்றத்துார் அருகே மவுலிவாக்கம் ஊராட்சி அமைந்துள்ளது. அங்கே குன்றத்துார்- — பூந்தமல்லி நெடுஞ்சாலை, போரூர் – -குன்றத்துார் நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில், மவுலிவாக்கத்தில் இருந்து மாங்காடு செல்லும் சாலை அமைந்துள்ளது. இதனால், இந்த சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.
இந்நிலையில், மவுலிவாக்கம், பரணிபுத்துார், பட்டூர் பகுதியில் இந்த சாலை பல இடங்களில் சேதமாகி குண்டும், குழியுமாக படுமோசமாக உள்ளது.
அந்த வழியே செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. காலை, மாலை நேரங்களில் கடும் நெரிசல் ஏற்படுகிறது.
எனவே, மேற்கூறிய சாலைகளை விரைந்து சீரமைக்க நடவடிக்கை வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்