கேரளா, ஆந்திராவை விட தமிழ்நாட்டில் வரி குறைவு: மேயர் பிரியா பேட்டி

பெரம்பூர்: சென்னை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 44 வார்டுகளில் உள்ள 83 வட்டங்களிலும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் வீதிவீதியாக சென்று பொதுமக்களை சந்தித்து, அவர்களது குறைகள் மற்றும் தேவைகளை கண்டறியும் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. முதல் நிகழ்வாக, மேயர் பிரியா தலைமையில் அயனாவரத்தில் நேற்று இந்த சிறப்பு முகாம் கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 70வது வார்டில் நடந்தது. அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து அயனாவரம் மற்றும் மேயர் வார்டுக்கு சென்று அமைச்சர் சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா, வீடு வீடாக சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்து கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும் என பொதுமக்களிடம் தெரிவித்தனர். தொடர்ந்து மேயர் பிரியா நிருபர்களிடம் அளித்த பேட்டி: மாநகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக வரி உயர்த்தாமல் இருந்தது. கடந்த 2022ம் ஆண்டு தான் சொத்து வரியை குறைவாக உயர்த்தினோம்.

கேரளா, ஆந்திரா மற்றும் வட மாநிலங்களை விட தமிழ்நாட்டில் வரி குறைவாகத்தான் வசூலிக்கப்படுகிறது. ஒன்றிய அரசு கொடுக்கக்கூடிய வழிகாட்டு நெறிமுறைகளின்படிதான் அரசு சார்பில் மிகக்குறைவாக வரி வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் ஐ.சி.எப்.முரளி, நாகராஜன். மண்டல குழு தலைவர் சரிதா மற்றும் நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *