ஒற்றுமைக்கு பாடுபடும் பா.ஜ., வாஜ்பாயி விழாவில் சரத்குமார் பேச்சு
சென்னை, தமிழக பா.ஜ., வடசென்னை மேற்கு மாவட்டம் சார்பில், கிறிஸ்துமஸ் விழா, முன்னாள் பிரதமர் வாஜ்பாயி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட தலைவர் கபிலன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், நடிகர் சரத்குமார் பேசியதாவது:
பிரதமர் மோடியை ஆதரித்தால், நாடு முன்னேறி விடும் என்பதால், ஜாதி, மத அடிப்படையில் நம்மை பிரித்தாள சிலர் முயல்கின்றனர். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒற்றுமையை பா.ஜ., ஏற்படுத்தி வருகிறது.
இன்று அனைத்து மாநிலத்தவரும் சிரமமின்றி பயணிக்க தங்க நாற்கர சாலை திட்டத்தை கொடுத்தவர் வாஜ்பாயி. பொக்ரான் திட்டத்தால், சக்தி வாய்ந்த நாடாக உலகிற்கு இந்தியாவை காட்டியவர். இதைப் பற்றி மக்களுக்கு நாம் எடுத்துரைக்க வேண்டும்.
இன்று யார் வேண்டுமானாலும் காஷ்மீர் சென்று வர முடியும். அந்தளவு பயங்கரவாதத்தை அங்கு ஒடுக்கியவர் மோடி. தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் விரைவில் நடக்கும்; தாமரை மலரும். அதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.