நடுக்கடலில் மீன் பிடித்தபோது மீனவர்கள் வலையில் சிக்கிய ராக்கெட் உதிரிபாகம்: துறை முகத்தில் ஒப்படைப்பு

தண்டையார்பேட்டை: காசிமேடு பகுதியை சேர்ந்த வினோத்குமார் என்பவரின் விசைப்படகில், டிரைவர் லோகநாதன் தலைமையில் 6 பேர், கடந்த 21ம் தேதி, மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர், இவர்கள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா நிஜாம் பட்டினம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இவர்களது வலையில், அலுமினியத்தால் ஆன 5 அடி நீளம் ஒன்றரை அடி அகலத்தில், 100 கிலோ எடை கொண்ட ராக்கெட் உதிரி பாகம் சிக்கியது.

அதனை மீட்ட மீனவர்கள், நேற்று காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வந்து, மீன்பிடி துறைமுக உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அதனை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் இதுகுறித்து ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி கழகத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதேபோல், கடந்த மாதமும் மீனவர் வலையில் ராக்கெட் உதிரி பாகம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘சோதனையின் போது கடலில் விழுந்த உதிரிபாகங்கள் மீனவர்கள் வலையில் சிக்குகிறது. இதில் வேறு எந்த பிரச்னையும் இல்லை,’’ என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *