வேன் மீது கார் மோதல் தொழிலாளர்கள் உள்பட 14 பேர் படுகாயம்

சென்னை: தனியார் தொழிற்சாலைக்கு தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற வேன் மீது கார் மோதியதில் தொழிலாளர்கள் உள்பட 14 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தனியார் கார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். அதன்படி, நேற்று காலை காஞ்சிபுரத்தில் இருந்து தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று ஸ்ரீபெரும்புதூர் நோக்கி சென்றுகொண்டிருந்தது.

அப்போது, காஞ்சிபுரம் அடுத்த பொன்னேரிக்கரை பகுதியில் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வளைவில் வேன் திரும்பியபோது, எதிர்பாராதவிதமாக கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பகுதியில் இருந்து சென்னைக்கு அதிவேகமாக வந்த ஒரு கார் அதிவேகமாக மோதியதில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், தொழிற்சாலை பணிக்கு வேனில் சென்ற தொழிலாளர்கள் 10 பேர், சென்னை உயர் நீதிமன்றத்திற்கு சிவில் வழக்கு சம்பந்தமாக காரில் சென்ற 4 பேர் பலத்த காயமடைந்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரிக்கரை காவல் நிலைய போலீசார், காயமடைந்த 14 பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *