பலாத்கார வழக்கு: மேலும் 2 பேர் கைது
சென்னை: அயனாவரத்தைச் சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய, 21 வயது இளம்பெண், சென்னையில் உள்ள கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். அப்பெண்ணின் தாய், 2022ல் உயிரிழந்த நிலையில், அவரது தந்தை தான் மாணவியை வளர்த்து வருகிறார்.
அப்பெண்ணிடம் தோழி வாயிலாக அறிமுகமான ஆண் நண்பர்கள் மற்றும் சமூகவலைதளங்கள் வாயிலாக அறிமுகமானவர்கள், அவரது மனநிலையை சாதகமாக்கி, அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது குறித்து கண்டறிந்த அப்பெண்ணின் தந்தை, சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
வழக்கு பதிவு செய்த போலீசார், அப்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஏற்கனவே, ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதைத்தொடர்ந்து வழக்கில் தொடர்புடைய, ராமநாதபுரத்தை சேர்ந்த கவியரசன், 30, பாண்டி, 30, ஆகிய இருவரை, மகளிர் போலீசார் நேற்று கைது செய்தனர்.
இந்த வழக்கில் இதுவரை, ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும், சிலரின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.