கன்டோன்மென்ட் குப்பை கொட்ட எதிர்ப்பு
பழவந்தாங்கல்,ஆலந்துார் மண்டலம், 166வது வார்டுக்கு உட்பட்ட பழவந்தாங்கல், நேரு நெடுஞ்சாலையில், பரங்கிமலை கன்டோன்மென்ட் போர்டுக்கு சொந்தமான, 15க்கும் மேற்பட்ட ஏக்கர் காலி மனை உள்ளது.
இந்த காலி மனையில், போர்டு நிர்வாகம் பரங்கிமலை பகுதியில் சேரும் குப்பைகளை கொட்டி சேகரித்து வந்தனர். நங்கநல்லுார், கன்டோன்மென்ட் பகுதியில் சேரும் குப்பையை பழவந்தாங்கலில் கொட்டுவதால், அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, கடந்த 2021ல் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, லாரிகளை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, அங்கு குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில், சில நாட்களாக கன்டோன்மென்ட் போர்டு நிர்வாகம், மீண்டும் குப்பை கொட்ட துவங்கியது.
இத்தகவல் அறிந்து, பழவந்தாங்கல், பக்தவச்சலம் நகர் பகுதிவாசிகள் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, நேற்று லாரியை சிறை பிடித்து திருப்பி அனுப்பினர்.