துறைமுக பகுதியில் கடலில் பாய்ந்த காரின் ஓட்டுனரை தேடும் பணி தீவிரம்

துறைமுகம்,சென்னை, கொடுங்கையூரைச் சேர்ந்தவர் முகமது சகி, 32; கார் ஓட்டுனர். இவர், சென்னை துறைமுகத்திற்கு உள்ளேயே, கடற்படை வீரர்களை காரில் அழைத்து செல்லும் பணியை மேற்கொண்டு வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு கடலோர காவல் படை வீரர் ஜோஹந்தர் கண்டா என்பவரை, துறைமுகத்தின் ஜவஹர் டாக் என்ற இடத்திற்கு அழைத்து செல்வதற்காக சென்றிருந்தார்.

துறைமுகத்தில் கடலோர காவல் படை வீரர் ஜோஹந்தர் கண்டாவை ஏற்றிக்கொண்டு, ஓட்டுனர் முகமது சகி காரை ‘ரிவர்ஸ்’ எடுத்துள்ளார்.

அப்போது, ‘பிரேக்’ பிடிக்காததால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், கடலுக்குள் விழுந்து, 80 அடி ஆழத்திற்கு சென்றது.

சுதாரித்த ஜோஹந்தர் கண்டா கார் கடலுக்குள் மூழ்கும் போதே, காரின் பின்புற கண்ணாடியை உடைத்து வெளியேறினார். கடலில் தத்தளித்த ஜோஹந்தர் கண்டாவை பார்த்த துறைமுக ஊழியர்கள், கடற்படை வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த கடலோர காவல் படை வீரர்கள், ஜோஹந்தர் கண்டாவை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அங்கேயே அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக, அவரை மவுண்ட் ராணுவ மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சையில் உள்ளார்.

கடலில் மூழ்கிய கார், நேற்று அதிகாலை கிரேன் வாயிலாக மீட்கப்பட்டது. அதேநேரம், கடலில் மூழ்கிய கார் ஓட்டுனர் முகமதி சகியை, மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

மீட்பு பணியில் 30க்கும் மேற்பட்ட கடலோர காவல் படை வீரர்கள், 20க்கும் மேற்பட்ட தீயணைப்புப் படை வீரர்கள், ஸ்கூபா வீரர்கள், ஈடுபட்டு உள்ளனர்.

விபத்து குறித்து, துறைமுக போலீசார்விசாரிக்கின்றனர்.

துறைமுக கடலில் மீட்கப்பட்ட கார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *