கடலில் கவிழ்ந்த படகு நீந்தி கரையேறிய மீனவர்கள்
பழவேற்காடு பழவேற்காடு பகுதியில் கடலில் மீன்பிடிக்க, நேற்று அதிகாலை, வைரவன்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த இளங்கோ, 27, ஜானகிராமன், 58, சுந்தர், 29, ஆகியோர், பைபர் படகில் சென்றனர்.
முகத்துவாரம் வழியாக கடலுக்குள் செல்லும்போது, திடீரென ஏற்பட்ட ராட்சத அலையில் படகு சிக்கி, தலைகுப்புற கவிழ்ந்தது. கடலில் விழுந்த மூவரும் நீந்தி கரை சேர்ந்தனர்.
அதே நேரம், படகில் இருந்த, 80,000 ரூபாய் மதிப்பிலான வலைகள் அலையில் அடித்து செல்லப்பட்டன. படகு முகத்துவாரம் பகுதியில் தடுப்பு கற்களில் மோதி உடைந்தது. இதனால் மீனவர்களுக்கு, பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
பொன்னேரி மீன்வளத் துறையினர் மற்றும் திருப்பாலைவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.