நீர் திறப்பு அதிகரிப்பால் வடியாத வெள்ளம்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளுக்கு, நீர்வரத்து உள்ளதால், வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால், சாலை, குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் வடிவதில் சிக்கல் நீடிக்கிறது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இரு நாட்களுக்கு முன் பலத்த மழை பெய்தது.

விட்டு விட்டு மழை பெய்தபோதும், அதிகப்படியான மழை பெய்ததால், சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, இரட்டை ஏரி உள்ளிட்ட ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

இதனால், செம்பரம்பாக்கத்தில் நேற்று முன்தினம் 4,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.

ஸ்ரீபெரும்புதுார், பிள்ளைப்பாக்கம், நேமம் ஏரி உட்பட காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகள் நிரம்பி, செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் வருகிறது.

இதனால், சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க, செம்பரம்பாக்கம் திறக்கப்படும் நீரின் அளவு நேற்று வினாடிக்கு 6,000 கன அடியாக உயர்த்தப்பட்டது. இதனால், அடையாறு கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அதை ஒட்டிய பகுதிகளில் வசிப்போர், பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.

நேற்றைய நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 24ல் 22.70 அடியை எட்டியுள்ளது. கொள்ளளவு 3.64ல் 3.30 டி.எம்.சி.,யும், நீர் வரத்து வினாடிக்கு 2,550 கன அடியாகவும் உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரின் ஒரு பகுதி, ஸ்ரீபெரும்புதுார் – குன்றத்துார் சாலையில், குன்றத்துார் முருகன் கோவில் அருகே வெளிவட்ட சாலையின் சர்வீஸ் சாலையை கடந்து சென்று, அடையாறு கால்வாயில் சேர்கிறது.

இந்த சாலையில் 3 அடிக்கு தண்ணீர் சூழ்ந்துள்ளதால், சர்வீஸ் சாலை நேற்று மூடப்பட்டது.

இந்த வழியே குன்றத்துார், திருமுடிவாக்கம், திருநீர்மலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வோர், வெளிவட்ட சாலை மேம்பாலம் வழியாக, மாற்று வழியில் குன்றத்துார், திருமுடிவாக்கம் பகுதிகளுக்கு செல்கின்றனர்.

அதேபோல், பூந்தமல்லி ஒன்றியம், பாரிவாக்கம் ஏரி நிரம்பி வெளியேறும் உபரி நீர், பூந்தமல்லியில் இருந்து பாரிவாக்கம் செல்லும் சாலையில் வழிந்தோடுவதால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

சென்னையின் பிரதானமானதாக கருதப்படும் ஏரிகளுக்கு தொடர் நீர்வரத்து உள்ள நிலையில், அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என, வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஏரிகளில் இருந்து ஏற்கனவே வெளியேற்றப்பட்ட நீர் வடியாமல், பாதிப்பு ஏற்படுத்தி வரும் நிலையில், மீண்டும் கனமழை பெய்தால், ஏரிகளில் நீர் திறப்பு அதிகரித்து மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும்.

 

பூண்டி, புழல் உபரி நீர் சூழ்ந்ததால்

தீவான சடையங்குப்பம், பர்மா நகர்திருவள்ளூர் மாவட்டம், பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம், 35 அடி ஆழம் உடையது. இதில், 34.95 அடி உயரத்திற்கு நீர் உள்ளது. நேற்று வினாடிக்கு, 10,300 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால், வெளியேற்றும் நீரின் அளவு 16,500 கன அடி உபரி நீர், கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்படுகிறது.இந்த உபரி நீர், திருவள்ளூர் மாவட்டத்தின் பல கிராமங்களை கடந்து, சென்னை மாநகராட்சியின், மணலிபுதுநகர், இடையஞ்சாவடி, சடையங்குப்பம் வழியாக, புழல் உபரிநீருடன் இணைந்து, எண்ணுார் முகத்துவாரம் வழியாக சென்று கடலில் கலக்கும்.இந்நிலையில், புழல் உபரி கால்வாயில்,ஆமுல்லைவாயல் வரை மட்டுமே கரைகள் உள்ளன. அதே போல், பூண்டி உபரி நீர் வரக்கூடிய, கொசஸ்தலை ஆற்றில், மணலிபுதுநகருக்கு அடுத்தபடியாக கரைகள் கிடையாது. இதனால், உபரி நீர் பரவி செல்ல வேண்டிய சூழல் உள்ளது.இதற்கிடையில், நேற்று முன்தினம் மாலை, 6:00 மணி முதல், கடல் அலை கரையை நோக்கி வேகமாக அடிக்க துவங்கியதால், உபரி நீர் கடலில் கலப்பதில் தாமதம் ஏற்பட்டது.இதன் காரணமாக, உபரி கால்வாயில் வந்துக் கொண்டிருந்த ஏரிகளின் உபரி நீர், கரைகள் இல்லாத, சடையங்குப்பம் – பர்மா நகர் பகுதியில், பக்கவாட்டில் ஏற துவங்கியது.சடையங்குப்பம் மேம்பாலம் – சடையங்குப்பம் கிராமத்தை இணைக்கும், 500 அடிதுார தார்சாலையில், இடுப்பளவிற்கு உபரி நீர் ஏறியுள்ளது. மேலும், மூன்று தெருக்கள் மற்றும் இருளர் காலனி முழுதும், வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.பாதிக்கப்பட்ட அப்பகுதியைச் சேர்ந்த 100 பேர், சடையங்குப்பம் – மாநகராட்சி தொடக்கப் பள்ளி மற்றும் மணலிபுதுநகர் விவேகானந்தா தனியார் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.உபரி நீரால், மணலி விரைவு சாலையையொட்டி, புழல் உபரி கால்வாய் மீது அமைக்கப்பட்டிருக்கும், பர்மா நகர் உயர்மட்ட பாலம் துவங்கி, பர்மா நகர் குடியிருப்புகள் வரை, ஒரு கி.மீ., துாரத்திற்கு, இடுப்பளவிற்கு உபரி நீர் தேங்கி நிற்பதால், போக்குவரத்து முடங்கியது. அப்பகுதி மக்கள் வெளியேற வழியின்றி, வெள்ள நீரில் தத்தளித்தபடி சென்று வருகின்றனர். இதன் காரணமாக, சடையங்குப்பம் – பர்மா நகர் குடியிருப்புகள் தனிதீவாக மாறியுள்ளன.புழல் ஏரிபுழல் ஏரி 3.3 டி.எம்.சி., கொள்ளளவு உடையது. தொடர் மழையால் நீர்வரத்து கிடைத்து 2.8 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது. 21.2 அடி உயரம் உடைய ஏரியில், 19.72 அடிக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது.நீர்வரத்து தொடர்ந்து 709 கன அடியாக இருப்பதால், நேற்று முன்தினம் திறக்கப்பட்ட 500 கன அடி நீர், நேற்று 1,000 கன அடியாக உயர்த்தப்பட்டது. இந்த உபரி நீர், 13.5 கி.மீ., நீள கால்வாய் வழியே கடந்து, எண்ணுார் கடலில் சென்று கலக்கிறது. நாரவாரிகுப்பம், வடகரை, கிராண்டலைன், சாமியார்மடம், தண்டல்கழனி, பாபாநகர், வடபெரும்பாக்கம், வடகரை, மணலி, கொசப்பூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களின் வழியே உபரிநீர் செல்வதால், அப்பகுதியில் கால்வாய் ஓரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக

இருக்க, திருவள்ளூர் கலெக்டர் எச்சரித்துள்ளார்.சென்னை மாதவரம், சின்ன ரவுண்டானா வடபெரும்பாக்கம் வழியாக, செங்குன்றம் செல்லும் பிரதான நெடுஞ்சாலையில், வடபெரும்பாக்கம் அருகே வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், வாகன ஓட்டிகளும், பகுதிவாசிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

– நமது நிருபர் குழு –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *