‘டியூட்டி ப்ரீ’ பொருட்கள் எடுத்து செல்ல அனுமதி மறுப்பு – சென்னை ஏர்போர்ட்டில் பயணியர் அலைக்கழிப்பு
சென்னை, சென்னை விமான நிலையத்தில், ‘டியூட்டி ப்ரீ’ கடைகளில் பொருட்கள் வாங்கி வரும் பயணியரை சுங்கத்துறை அதிகாரிகள் அலைக்கழிப்பதாக, பயணியர் புகார் தெரிவித்துள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் வெளி நாடுகளுக்கு இடையே தினசரி விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இதில், வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பயணியர் வருகின்றனர். குடியுரிமை சோதனை முடித்து, சுங்கத்துறை சோதனையை கடந்து, வெளியே செல்கின்றனர்.
இவர்களின் உடைமைகளில் ஏதேனும் சந்தேகிக்கும்படி தங்கம், மின் உபகரணங்கள் உள்ளிட்டவை இருந்தால் சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, சோதனை செய்து பறிமுதல் செய்வர்.
முறையாக வரி செலுத்தாமல் கொண்டுவரும் இவ்வகை பொருட்களுக்கு, சுங்கவரி செலுத்த சொல்ல, சுங்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது
இந்நிலையில், சர்வதேச விமான நிலையங்களின் வருகை பகுதியில் ‘டியூட்டி ப்ரீ’ எனும் வரி இல்லாமல் பொருட்கள் வாங்கும் கடைகள் செயல்படுகின்றன.
இந்த கடைகளில் விலை உயர்ந்த சாக்லெட்டுகள், வாசனை திரவியங்கள், மதுபாட்டில்கள் உள்ளிட்ட பொருட்கள் உள்ளன.
பயணியர், பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை காண்பித்து, வரி குறைவாக பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.
இப்படி வாங்கும் பொருட்களுக்கு, சில எல்லை உண்டு. விதிகளுக்குட்பட்டு இப்பொருட்களை வாங்கி வந்தாலும், சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கெடுபிடி காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பயணியர் கூறியதாவது:
வெளிநாட்டுக்கு சென்று திரும்பம்போது ‘டியூட்டி ப்ரி’ கடைகளில் சாக்லெட் மற்றும் உயர் ரக தின்பண்டங்கள், மதுபாட்டில்கள் வாங்குவது வழக்கம். அப்படி, சென்னை விமான நிலையத்தில் உள்ள கடையில் சில பொருட்களை வாங்கினோம்.
கைப்பையில் வைத்திருந்த பொருட்களை பிரித்து பார்த்த சுங்கத்துறை அதிகாரிகள், அதை பறிமுதல் செய்தனர். அப்பொருட்களுக்கான முறையான ரசீதைக் காட்டியும், அதை வெளியில் எடுத்துச் செல்ல அவர்கள் அனுமதிக்கவில்லை.
பயணியர் பயன்பெறும் வகையில் தான் கடைகள் நடத்தப்படுகின்றன. அதனால் தான் அந்த கடைகளில் வாங்கி செல்கிறோம்.
வெளிநாடுகளில் இருந்து கடத்தி வந்ததுபோல் எங்களிடம் அதிகாரிகள் நடந்து கொள்கின்றனர். தவிர, விசாரணை என்ற பெயரில் நீண்ட நேரம் அலைக்கழிக்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.