பீச் கடைக்காரர்கள் இடையே அடிதடி சலுகை அறிவிப்பால்
சென்னை, திருவல்லிக்கேணி, நடுக்குப்பம் 7வது தெருவைச் சேர்ந்தவர் சாக்ரடீஸ், 49; வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக உள்ளார்.
இவரது மனைவி இளவரசி, 38. இவர், மெரினா கடற்கரையில் அவ்வையார் சிலை பின்புறம், ‘நம்ம சென்னை’ என்ற பெயரில் துரித உணவகம் நடத்தி வருகிறார்.
வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக, இளவரசி ‘காம்போ’ சலுகை அறிவித்து இருந்தார். இதை பின்பற்றி, அருகே ‘பிலால்’ என்ற பெயரில் கடை நடத்தி வரும் முகமது ஷாயின் ஷா, 23, என்பவரும், ‘காம்போ’ சலுகை அறிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த இளவரசி, முகமது ஷாயின்ஷாவிடம் இது குறித்து கேட்டுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. பின் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இதில் காயமடைந்த இளவரசி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து மெரினா போலீசார் விசாரிக்கின்றனர்.