கொருக்குப்பேட்டை சர்வீஸ் சாலை மாறிய மரண பள்ளங்களாக
கொருக்குப்பேட்டைசென்னை, கொருக்குப்பேட்டை, தீயணைப்பு நிலையம் அருகே எழில் நகரில் ரயில்வே தண்டவாளம் செல்கிறது.
இந்த ரயில் பாதையின் இடையே, எழில் நகர், எம்.ஜி.ஆர்.நகர், நேரு நகர், கார்நேசன் நகர், குமரன் நகர், அஜீஸ் நகர், சந்திரசேகர் நகர், கருமாரியம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர்.
இங்கு ரயில் போக்குவரத்திற்காக, தினமும் 20 முறைக்கு மேல், வாகன போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்வதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கொருக்குப்பேட்டை, எழில் நகர் பகுதியில் ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம் அமைக்கும் பணியை, 2023ல் மார்ச்சில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி துவக்கி வைத்தார்.
தற்போது மேம்பால பணி நடந்து வரும் நிலையில், அதன் ‘சர்வீஸ்’ சாலைகள் படுமோசமாக உள்ளன. சமீபத்திய ‘பெஞ்சல்’ கனமழையால், சாலைகள் மிகவும் சேதமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக மெகா பள்ளங்களாக காட்சியளிக்கிறது.
சாலையில் குளம் போல் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர்.
இந்த பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் தினமும் விபத்தில் சிக்குகின்றனர்.
இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர், சாலையில் உள்ள பள்ளங்கள் தெரியாமல் தினந்தோறும் விபத்தில் சிக்குவது தொடர்கதையாகிறது.
சம்பந்தப்பட்ட துறையினர் விரைந்து சாலையை சீரமைக்க நடவடிக்கை வேண்டுமெனவாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.